
எதிர்க்கட்சி என்ற வகையில் தாங்கள் மக்களுக்கு சேவையாற்றுவதை நெகிரி செம்பிலான் மாநில மடானி அரசாங்கம் தடை செய்து வருவதாக பெரிக்காத்தான் நேஷனல் ஜெராம் பாடாங் தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் குற்றஞ் சாட்டினார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நெகிரி செம்பிலான்,ஜெராம் பாடாங்கில் தாங்கள் ஏற்பாடு செய்திருந்த காற்பந்து போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்யும் சமூக நிகழ்ச்சிகளுக்கு இப்படித்தான் அரசியல் சூழ்ச்சி செய்வதா என இன்று இங்கு தமது அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இந்த அரசியல் கீழறுப்பு செயல்களில் ஈடுபடுவதை விட எதிர் வரும் மாநில சட்டமன்ற தேர்தலில் எங்களை எதிர்த்து போராடும் திராணி இவர்களுக்கு வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தை ஆட்சி செய்யும் பாக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி கூட்டணி அரசாங்கம் இம்மாநில மக்களுக்கு ஆற்ற வேண்டிய பல வேலைகள் நிலுவையில் இருந்து வருவதாக அவர் சாடினார்.
ஜெராம் பாடாங் தொகுதியில் உள்ள தாமான் தாசிக் புத்ராவில் தொலைபேசி சமிக்ஞை மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதனால் இவ் வட்டார மக்கள் கை தொலைபேசிகளில் உரையாடுவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
அதேபோல் இங்குள்ள தாமான் ஸ்ரீ ரொம்பினில் நீர் அழுத்தம் மிகக் குறைவாக இருந்து வருகிறது.
மக்களுக்கு வசதிகளை செய்து தரப்பட வேண்டிய இது போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருந்து வருகின்றன.
ஆனால் இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் சமூக நல நிகழ்ச்சிகளை தடை செய்வதிலேயே மாநில அரசாங்கம் குறியாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மக்களுக்கு ஆற்ற வேண்டிய இது போன்ற பல பிரச்சனைகள் இருந்து வருகின்றன.
ஆகையால் மக்களுக்கு சேவையாற்றுவதில் இந்த மாநில அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் சமூக நடவடிக்கைகளை முடக்குவதை நிறுத்திவிட்டு மக்கள் நலன்களில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.
மாநில அரசாங்கம் இது போன்ற அரசியல் நாடகத்தை நிறுத்திவிட்டு மக்கள் நலன்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என சஞ்சீவன் கேட்டுக் கொண்டார்.


