
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தொடர்ந்து பாத்தேக் ஏரின் கோலாலம்பூர்-டுபாய் இடையிலான விமான பயணத்தில் தடை ஏற்பட்டது.
இன்று 24 ஜூன் 2025 விடியற்காலை காத்தார் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசின் வான்வெளி மூடப்பட்டதால்,டுபாய்கான பாத்தேக் ஏரின் OD 713 விமானம் பயணத்தை தொடர முடியவில்லை என பாத்தேக் ஏர் அறிக்கை ஒன்றில் கூறியது.
அனைத்துலக விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனைகளை முழுமையாக பின்பற்றும் வகையில் இந்த முன்னெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
தனது பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் பாதுகாப்பிற்கு பாத்தேக் ஏர் முன்னுரிமை வழங்கி வருகிறது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு (கேஎல்ஐ) வந்தடைந்த பாத்தேக் ஏரின் OD 713 பயணிகளுக்கு ஹோட்டல் தங்குமிடம், உணவு, போக்குவரத்து மற்றும் இதர அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்து தரப்பட்டது.
விமானம் ரத்து செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிக்கெட் பதிவை ரத்து செய்து பணத்தை மீட்டிக்கொள்ள, அல்லது மற்றொரு தேதியில் பயணத்தை மாற்றிக் கொள்ளும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
தற்பொழுது காத்தார் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசின் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் விமான பயணங்கள் வழக்கு நிலைக்கு திரும்பியுள்ளன.
பாத்தேக் ஏரின் கோலாலம்பூர்-டுபாய் விமான பயணம் 25 ஜூன் 2025 புதன்கிழமை மீண்டும் தொடரும் என அந்த அறிக்கை தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் மலேசிய சிவில் விமான போக்குவரத்து கழகத்துடன் தொடர்பு கொண்டு பாத்தேக் ஏர் நிலவரத்தை அணுக்கமாக கண்காணித்து வரும்.
பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெடுப்பு மற்றும் பாதை மதிப்பீட்டு திட்டத்தை பாத்தேக் ஏர் அமலாக்கம் செய்துள்ளது.
அடுத்த பயணங்களுக்கு பயணிகள் பாத்தேக் ஏரின் அகப் பக்கத்தை வலம் வரலாம் அல்லது மாற்று ஏற்பாடுகளுக்கு பாத்தேக் ஏர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
பயணிகளுக்கு உயிர்நிலை தர பாதுகாப்பை வழங்குவதே பாத்தேக் ஏரின் பிரதான நோக்கமாகும்.


