
கோத்தா கூட்டுறவு கழகத்தின் 43-வது ஆண்டு பேராளர்கள் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூன் 21 2025 சனிக்கிழமை நடைபெறவிருப்பதாக கோத்தா கூட்டுறவு கழகத்தின் செயலாளர் உத்தமன் வேலு கூறினார்.
இந்த பொதுக்கூட்டம் காலை 9 மணிக்கு இங்குள்ள சான் யின் ஹோட்டலில் நடைபெறும் என அவர் சொன்னார்.
இந்த பொதுக்கூட்டத்தில் சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பிரதேசத்தை சேர்ந்த சுமார் 55 பேராளர்கள் கலந்து கொள்வார்கள் என்றார் அவர்.
கடந்த 3 ஜூன் 1975 ஆம் ஆண்டு பச்சையப்பன் ஆசிரியர் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த கூட்டுறவு கழகம் வெகு சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
காலஞ்சென்ற டான்ஸ்ரீ சுப்ரமணியம் தலைமையில் தொடங்கப்பட்ட தேச கூட்டுறவு கழகம் உதயத்தின் போது தான் கோத்தா கூட்டுறவு கழகமும் தொடங்கப்பட்டது.
கடந்த 1998 ஆம் ஆண்டு இந்தக் கூட்டுறவு கழகத்தின் செயலாளர் பொறுப்பை தாம் வகித்ததை தொடர்ந்து இந்த கூட்டுறவு கழகத்தின் சட்ட திட்டங்களில் பல மாற்றத்தை தாம் கொண்டு வந்ததாக அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 2005-ல் பங்குதாரர்களின் பணம் வெ 300 ஆக இருந்தது. பிறகு 2008 ஆம் ஆண்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பங்குதாரர்களின் பணம் வெ 500 ஆக உயர்த்தப்பட்டது.
மேலும் இந்த கூட்டுறவு கழகத்தின் உறுப்பினர்களின் மாத சந்தா பணம் 30 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது இந்த கூட்டுறவு கழகத்தின் சொத்து மதிப்பு 4 1/2 மில்லியன். வங்கியில் வைப்புத்தொகை 13 லட்சம் உள்ளது.
தனது உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகளை கோத்தா கூட்டுறவு கழகம் வழங்கி வருகிறது.
திருமண சலுகை, மரண சகாய நிதி, கல்விக் கடனுதவி, கடன் திட்டம், கல்வியில் சிறந்த தேர்வை பெறும் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு சலுகைகள் உட்பட பல வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கூட்டுறவு கழகத்தில் 800-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.
இந்த கூட்டுறவு கழகத்திற்கு சொந்தமான பல கட்டிடங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
மேலும் 23 ஏக்கர் நிலம் வீடமைப்பு திட்டத்திற்கு விடப்பட்டுள்ளது.
இந்த கூட்டுறவு கழகத்தை மேலும் வலுப்படுத்துவது தங்களின் பிரதான நோக்கம் என அவர் சொன்னார். இந்த கூட்டுறவு கழகத்திற்கு சொந்தமாக ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்க தாங்கள் இலக்கை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் சிலாங்கூரில் 50 சிறந்த கூட்டுறவு கழகங்களில் 38வது சிறந்த கூட்டுறவு கழகமாக கோத்தா கூட்டுறவு கழகம் தேர்வு செய்யப்பட்டது தங்களுக்கு பெருமையை தருவதாக உத்தமன் வேலு தெரிவித்தார்.


