
கோலாலம்பூர் மற்றும் தீமோர் லெஸ்டெ தலைநகரான திலி நகருக்கிடையே நேரடி விமான சேவையை முன்னணி விமான நிறுவனமான பாத்தேக் ஏர் தொடங்கியது.
இதன் முதல் கட்டமாக ஜூன் 6 ஆம் தேதி திலி நகரிலிருந்து பாத்திக் ஏரின் முதல் விமானம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை (கேஎல்ஐஏ1) வந்தடைந்தது.
திலி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து வந்தடைந்த பயணிகளை மலேசியா சுற்றுலாத்துறை மற்றும் பாத்திக் ஏர் அதிகாரிகள் அன்பளிப்பு பைகளை வழங்கி வரவேற்றனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மலேசிய சுற்றுலா துறையின் அனைத்துலக விளம்பரப் பிரிவு (ஆசியான்) இயக்குனர் சாலின்டா சானி கலந்துகொண்டு பயணிகளை வரவேற்றார்.
திலி-கோலாலம்பூர் நகர்களுக்கிடையே நேரடி விமான சேவையை மேற்கொள்ளும் முதல் மலேசிய விமான நிறுவனம் பாத்தேக் ஏர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமோர் லெஸ்டே பயணிகள் மலேசியாவிற்கு வருகை புரிய ஒரு புதிய நுழைவாயிலாக இந்த விமான சேவை அமைந்துள்ளது.
இந்த புதிய விமான சேவையின் மூலம் மலேசியா மற்றும் திமோர் லெஸ்டே நாடுகளுக்கிடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை மேலும் வலுவடைய வாய்ப்பாக அமைந்துள்ளது.
திலி-கோலாலம்பூர் நகர்களுக்கிடையே வாரத்திற்கு இரண்டு முறை விமான சேவையை பாத்தேக் ஏர் மேற்கொள்கிறது.

இதன் மூலம் திலி நகரைச் சேர்ந்த பயணிகள் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 60 நகர்களுக்கு சிறகடிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த விமான சேவையின் மூலம் ஆசியானின் இளைய நாடுகளில் ஒன்றான திமோர் லெஸ்டே நாட்டின் சுற்றுப்பயணிகளை மலேசியா சுற்றுலாத்துறை கவர முடியும்.
இதனிடையே இந்த புதிய விமான பாதை அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என தாம் நம்புவதாக பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.

மலேசியாவில் உள்ள பல்வேறு சுற்றுலா வாய்ப்புகளை திமோர் லெஸ்டே பயணிகள் நன்கு பயன்படுத்திக்கொள்ள இந்த புதிய விமான பாதை வழி வகுத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசியாவில் உள்ள அழகிய தீவுகள், வளமான கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரிய உணவுகளை கண்டறிய திமோர் லெஸ்டே பயணிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தனது பயணிகளுக்கு பாத்தேக் ஏர் சொகுசான சேவைகளை வழங்கி வருகிறது. தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பயணிகள் பயண சேவைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இதனிடையே கோலாலம்பூர்-திலி நகர்களுக்கிடையிலான இந்த விமான சேவை பொருத்தமான தருணம் என மலேசிய சுற்றுலாத்துறை தலைமை இயக்குனர் டத்தோ மனோகரன் பெரியசாமி கூறினார்.

இந்த புதிய விமான சேவையின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாத்துறை மேலும் வலுபெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த 2024-ல் மலேசியா 38 மில்லியன் அனைத்துலக சுற்றுப்பயணிகளை வரவேற்றதாக அவர் சுட்டிக்காட்டினார்.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டுக்கான பிரச்சாரத்தின் மூலம் இன்னும் அதிகமான சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வருகை புரிவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
திலி-கோலாலம்பூருக்கு இடையிலான விமான பயண நேரம் 4 மணி 15 நிமிடமாகும்.


