
கூலாய் – இந்திய சமூகத்தை மையமாகக் கொண்ட பகுதிகளில் ‘நண்பா’ எனும் திட்டத்தை சமூக தொடர்புத் துறை (ஜே-கோம்) நாடு முழுவதும் விரிவுபடுத்தும்.
அரசாங்கத் தகவல்களை கொண்டு சேர்ப்பதற்கும், அரசாங்கத்திற்கும் சமூகத்திற்கும் குறிப்பாக இந்திய இளைஞர்களுக்கும் இடையிலான தொடர்பு இடைவெளியைக் குறைப்பதற்குமான ஒரு தளமாக ‘நண்பா’ திட்டம், தொடர்பு அமைச்சின் ஒரு புதிய முயற்சியாக அமைந்திருப்பதாக தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
“இத்திட்டம் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை நாடு தழுவிய அளவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதில், ரஹ்மா விற்பனை, அரசாங்க, தனியார் துறை கண்காட்சிகள், வண்ணம் தீட்டுதல் மற்றும் சுவரொட்டி வரைதல் போட்டிகள் போன்ற பல்வேறு சுவாரஸ்யமான அங்கங்கள் இடம்பெற்றன,” என கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ தெரிவித்தார்.

“இது ஒரு நல்ல தொடக்கம். தொடர்ந்து இந்திய சமூகங்கள் அதிகம் உள்ள பேராக், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் போன்ற மாநிலங்களுக்கு நாங்கள் செல்லவிருக்கிறோம்,” என ஜோகூர், கூலாயில் உள்ள தாமான் மேவா பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற ‘நண்பா’ திட்ட நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் தலைமை தாங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த முன்னோடித் திட்டத்தை செயல்படுத்த முதல் இடமாக கூலாயைத் தேர்ந்தெடுத்ததற்காக ஜே.கோம்-க்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்.
கூலாய் மக்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றும், மக்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்து கேட்டறிவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கான சான்றாகவும் இது அமைந்துள்ளதாக அவர் விவரித்தார்.


