
மருத்துவ பரிசோதனை இல்லாமல் மூத்த குடிமக்களுக்கு காப்புறுதி திட்டம் ஒன்று அறிமுகம் அச்சத்தை ஏற்படுத்துவதாக தேசிய பயனீட்டாளர் புகார் மையத்தின் உயர்நிலை நிர்வாகி சாரால் ஜேம்ஸ் மணியம் கூறினார்.
எம்சிஐஎஸ் லைப் காப்புறுதி நிறுவனத்தின் ‘Golden Senior Care’ என்ற காப்புறுதி திட்டம் மக்களிடையே பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தத் திட்டத்தில் நீரிழிவு, புற்றுநோய், மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாக இந்த காப்புறுதி திட்டம் கூறுகிறது.
இந்தத் திட்டத்தில் மூத்த குடிமக்கள் நிபந்தனைகள் இன்றி 100 % ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என வலியுறுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த இனிப்பான வாக்குறுதிகளால் பயனீட்டாளர்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். காப்புறுதி பாரங்களில் தாங்கள் கையெழுத்திடுவதில் எது உண்மை என்பதை உணர தவறி விடுகிறார்கள் என அவர் சுட்டிக் காட்டினார்.
50 முதல் 70 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்களை சம்பந்தப்பட்ட காப்பறுதி நிறுவனம் குறி வைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த காப்புறுதி திட்டத்திற்கான சிற்றேடுகளில் முக்கிய தகவல்கள் தெளிவுபடுத்தப்படவில்லை. இருப்பினும் கடுமையான நோய்கள் இருந்தாலும் பாதுகாப்பு வழங்கப்படும் என பொய் தகவல்கள் இந்த சிற்றேடுகளில் கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த காப்புறுதி கூட்டத்தை வாங்கி மாதந்தோறும் காப்புறுதிக்கான பிரிமியத்தை செலுத்தி வருபவர்களின் காப்புறுதி தொகைக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், இவர்களின் நிலை என்னவாகும் என அவர் கேள்வி எழுப்பினார்.
2013 ஆம் ஆண்டு நிதி சேவை சட்டத்தின் வழி காப்புறுதி நிறுவனங்கள் உண்மையான மற்றும் நேர்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என பேங்க் நெகாரா வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
தங்களுடைய காப்புறுதி பொருள்களை விளம்பரப் படுத்துவதில் முறையான விதிமுறைகளை பின்பற்றும் படி காப்புறுதி நிறுவனங்களுக்கு பேங்க் நெகாரா நினைவுறுத்தி வருவதாக அவர் சொன்னார்.
இதன் காரணமாக காப்புறுதி திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பயனீட்டாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் ( போம்கா) மற்றும் தேசிய புகார் மையம் போன்ற அமைப்புகள் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
ஆகையால் முகவர்கள் மற்றும் சிற்றேடுகளை நம்பி ஏமாந்து விட வேண்டாம் என அவர் நினைவுறுத்தினார்.


