
செப்பாங் மார்ச் 29
எதிர்வரும் ஹாரி ராயா கொண்டாட்டத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டண விமான சேவையை ஏர் ஆசியா தொடங்கியது.
நேற்று முன் தினம் இரவு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ2) AK5648 விமானம் மீரி நகருக்கு புறப்பட்டது.
முழு அளவிலான 180 பயணிகளுடன் ஹாரி ராயா கொண்டாட்ட குதூகலத்துடன் விமானம் புறப்பட்டது.
மிக உற்சாகத்துடன் புறப்பட்ட பயணிகளை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் வழி அனுப்பி வைத்தார்.

அனைத்து பயணிகளுக்கும் அன்பளிப்பு பைகளை வழங்கி தமது ஹாரி ராயா வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
இந்த ஹாரி ராயா கொண்டாட்டத்திற்காக கோலாலம்பூர் மற்றும் ஜொகூர் பாருவிலிருந்து கிழக்கு மலேசியாவில் 10 நகரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 16,000 இருக்கைகளை ஏர் ஆசியா வழங்குகிறது.
சரவாக்கிற்கு வெ 328 மற்றும் சபாவிற்கு வெ 388 அனைத்தும் அடங்கிய ஒரு வழி பயண கட்டணத்தை ஏர் ஆசியா நிர்ணயித்துள்ளது.

ஹாரி ராயா கொண்டாட்டத்திற்காக தங்களின் நகர்களுக்கு திரும்பும் பயணிகளுக்கு தடையற்ற சேவையை வழங்கும்படி அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஏற்ப ஏர் ஆசியா இந்த ப் பயண வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக அந்தோணி லோக் கூறினார்.
கூடுதல் விமான சேவைகள், நிர்ணயிக்கப்பட்ட விமான கட்டணங்கள், பயணிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அவர் சொன்னார்.
இந்த நிகழ்ச்சியில் ஏர் ஆசியா எவியேஷன் குழும நிறுவனத்தின் துணை தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் செஸ்டர் வூ உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


