
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஜசெக மத்திய செயலவைக்கான தேர்தலில் கடுமையான போட்டி நிலவுகிறது.
கட்சியின் மத்திய செலவைக் காண 30 இடங்களுக்கு 70 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் தேர்வு செய்யப்படும் 30 பேர் தான் 2925-2028 தவணைக்கான கட்சியின் பொறுப்பாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
2028 பிப்ரவரி மாதத்திற்குள் நடைபெறவிருக்கும் 16 ஆவது பொதுத் தேர்தலை சந்திக்க இது ஒரு முக்கியமான காலகட்டமாகும்.
கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான லிம் குவான் எங் குடும்பத்தாருக்கு கட்சியில் இருக்கும் செல்வாக்கு தொடர்ந்து இருக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.
கட்சியில் அதிக செல்வாக்கு மிக்க பதவியான பொதுச் செயலாளராக இருந்து வரும் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நிலை என்ன என்பதும் தெரிந்துவிடும்.
அந்தோனி லோக் மற்றும் அவரின் சகாவான வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங் கட்சியின் மத்தியசெயலவையை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வார்களா என்பதை இன்று பேராளர்கள் முடிவு செய்வர்.
லிம்மின் குடும்பத்தினர் கட்சியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவார்களா அல்லது ஒரு புதிய தலைமைத்துவம் உருவெடுக்குமா என்பது தான் பலரின் கேள்வியாகும்.
இந்த தேர்தல் லிம் குடும்பத்தாரின் அரசியல் வாழ்வு என தாஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ஆசியா கல்வியின் பேராசிரியர் ஜேம்ஸ் சின் கூறினார்.
இன்றைய மத்தியசெயலவைக்கு லிம் மற்றும் அவரின் சகோதரி லிம் ஹூய் இங் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் குறைந்தது 16 இடங்களை கைப்பற்றும் தரப்பினர் தான் வெற்றி பெறும் அணியினராகும்.
ஜசெகவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளப் போவது பழைய அணியினரா அல்லது புதிய அணியினரா என்ற பதில் இன்று கிடைத்து விடும். கட்சியின் தலைவர் பதவிக்கு லிம் குவான் எங் மீண்டும் போட்டியிடக் கூடாது என சில தரப்பினர் நெருக்குதல் அளித்து வருவதாக நம்பப்படுகிறது. இந்த பதவிக்கு பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் யாவ் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பது இவர்களின் விருப்பமாகும்.
கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளும்படி இரு முறை கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக் லிம்மை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலாக கட்சியின் ஆலோசகராக லிம்மை நியமனம் செய்ய அவர் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த போட்டியிலிருந்து தாம் பின்வாங்க போவதில்லை என லிம் உறுதியாக இருப்பதாக நம்பப்படுகிறது.
இம்முறை நடைபெறும் கட்சித் தேர்தலில் கட்சியின் ஆலோசகர் டான் கோக் வை, உதவி தலைவர் எம். குலசேகரன் ஆகியோர் போட்டியிடவில்லை.
இருப்பினும் இவர்கள் லிம்மிற்கு ஆதரவாக இருந்து வருவதாக தெரிகிறது.
லிம்மின் தந்தை லிம் கிட் சியாங் கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் சுமார் 30 ஆண்டுகளாக கட்சியின் செல்வாக்கு மிக்க பதவியான பொதுச் செயலாளர் பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் போட்டியிடும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங்கின் செல்வாக்கு குறித்தும் தெரிந்து விடும்.


