
கோலாலம்பூர் மார்ச் 9
‘வேல் வேல்’ என கேலி செய்து இந்து மதத்தின் கலாச்சாரத்தை கேவலப்படுத்திய அஸ்ட்ரோவிற்கு சொந்தமான ஏரா எப்எம் வானொலியின் சில பணியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அமானா கட்சியின் கூட்டரசு பிரதேச பத்து தொகுதியின் மக்கள் ஒருங்கிணைப்பு பிரிவு தலைவர் எஸ். பாரதிதாசன் வலியுறுத்தினார்.
இந்து சமயத்தை கேலி செய்து இவர்கள் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ள காணொளி இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் மனதை பெரிதும் புண்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்துக்களின் சமயக் கலாச்சாரத்தை இழிவு படுத்திய ஏரா எப்எம் வானொலியின் 3 ஊழியர்கள் நேற்று பத்துமலைக்கு சென்று ஆலய நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டு இவர்கள் மன்னிப்பு கேட்டு விட்டால் மட்டும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியுமா? என அவர் கேள்வி எழுப்பினார்.
சர்ச்சுக்குரிய 3R விவகாரத்தை இவர்கள் மீண்டும் எழுப்ப மாட்டார்களா? என்பதற்கு என்ன உத்திரவாதம் என அவர் வினவினார்.
இந்து மதத்தை கேவலப்படுத்திய இந்த நபர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
இந்த நபர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.
பல இன மக்கள் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் மலேசியாவில் நடக்கக்கூடாதுபோன்று சம்பவங்கள் நடக்கக்கூடாது.
ஆகையால் இந்த பொறுப்பற்ற நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஒருவரின் மத நம்பிக்கைக்கு மற்றொருவர் மதிப்பளிக்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.


