
புத்ரா ஜெயா மார்ச் 4
தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவை(ஏஐ) நாம் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.
அனைத்து துறைகளிலும் தற்போது செயற்கை நுண்ணறிவு(ஏஐ) முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சில் தொழில்நுட்ப தகவல் மீதான கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
ஏஐ தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகமாக வலியுறுத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மக்களுக்கு அரசாங்கம் சிறந்த சேவையை வழங்க இந்த ஏஐ தொழில்நுட்பத்தை குறிப்பாக அரசு ஊழியர்கள் கையாள வேண்டும் என பிரதமர் வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆரம்பப் பள்ளி முதல் பல்கலைக்கழக மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சமூக தலைவர்கள் ஆகிய அனைவரும் இந்த தொழில்நுட்பத்தை அவசியம் கையாள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

நமது அன்றாட பணிகளை துரிதப்படுத்தவும் அந்த பணிகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் இந்த தொழில்நுட்பம் மிக அவசியமாகிறது என அவர் தெரிவித்தார்.
‘மக்களுக்கு ஏஐ’ திட்டத்தை பொருளாதார அமைச்சு தொடங்கியுள்ளது. ஒரு ஆண்டில் பத்து லட்சம் பேர் இந்த தொழில்நுட்பத்தை கையாள வேண்டும் என்ற இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் இந்த புதிய தொழில்நுட்ப கலாச்சாரத்தை கையாள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.


