
கோலாலம்பூர் மார்ச் 3
மலேசிய நகரத்தார் சொந்தமாக கூட்டுறவு வங்கி ஒன்றை தொடங்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.
இந்நாட்டில் நகரத்தார் சமூகம் பெரிய பாரம்பரியம் மற்றும் வரலாற்றை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பல சமூகத்தினர் தொழில்களை தொடங்கவும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த சமூகத்தினர் முக்கிய பங்காற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியா நகரத்தார் சங்கம் ஏற்பாடு செய்த 2025 செட்டிநாடு வணிக சந்திப்பு விழாவை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்நாட்டில் பெரும் சாதனைகளை படைத்து வருகின்றர்.

மேலும் பல சாதனையாளர்களை உருவாக்க இவர்கள் அடித்தளமாக இருந்து வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இவர்கள் தற்போது ஒன்றிணைந்து மலேசிய நகரத்தார் வர்த்தக தொழிலியல் சபையை தொடங்கியுள்ளனர்.
இந்த வர்த்தக சபையின் தோற்றம் மிக முக்கியமான ஒன்று என்று கருதப்படுவதாக அவர் சொன்னார்.
இந்நாட்டிலுள்ள இந்திய சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த இதுவரை பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் இந்திய சமூகத்தினர் இன்னும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளனர்.
ஆகையால் இந்தப் பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு காண மலேசிய நகரத்தார் வர்த்தக சபையினர் சொந்த வங்கி ஒன்றை தொடங்க வேண்டும் என சரஸ்வதி வலியுறுத்தினார்.
இதன் வழி சிறு, குறு மற்றும் நடுத்தர வர்த்தகருக்கு உதவ இவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
சொந்த வங்கியை தொடங்க இவர்கள் ஆர்வம் கொண்டால், இந்த விவகாரத்தை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல தான் தயார் என அவர் உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சபையின் தலைவர் டத்தோ ராமநாதன், மலேசியாவுக்கான இந்திய தூதர் பிஎன் ரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


