
பெட்டாலிங் ஜெயா மார்ச் 3
நாட்டில் தனியார் சுகாதார பாதுகாப்பு கட்டணங்கள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த விதிமுறை அவசியம் என மலேசிய பயனீட்டாளர்கள் சங்கங்களின் சம்மேளனம்
(போம்கா) வலியுறுத்தியது.
சுகாதாரப் பாதுகாப்பு சுகுசான ஒன்றல்ல, இது ஒரு அடிப்படை உரிமை என போம்கா தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சரவணன் தம்பிராஜா கூறினார்.
தனியார் சுகாதார பாதுகாப்பு குறித்து அண்மையில் டாக்டர் ஸ்டீவன் சௌவ் என்பவரின் அறிக்கை குறித்து அவர் கருத்துரைத்தார்.
மருத்துவ பரிசோதனைகளை விட கால்நடை மருத்துவ சேவைகளுக்கு கூடுதல் கட்டணத்தை செலுத்த பயனீட்டாளர்கள் முன் வருவதாக டாக்டர் சௌவ் வாதிடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
டாக்டர் சௌவின் இந்த ஒப்பிடுதல் தவறான ஒன்று. முக்கிய பிரச்சினையை இவர் திசை திருப்புகிறார் என டாக்டர் சரவணன் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் தனியார் சுகாதார பாதுகாப்பு பல மலேசியர்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்றார் அவர்.
கடுமையான விதிமுறைகள் இல்லாததால் தனியார் சுகாதார பாதுகாப்பு கட்டணங்கள் கண்மூடித்தனமாக அதிகரித்து வருவதாக அவர் சொன்னார்.
அரசாங்க மருத்துவமனைகளில் மக்கள் நெரிசல் மற்றும் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை காரணமாக, மலேசியர்கள் தனியார் சுகாதாரப் பாதுகாப்பு சேவையை நாட வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அரசாங்கம் பொது சுகாதார பாதுகாப்பை வழங்குவது மட்டுமின்றி தனியார் சுகாதார பாதுகாப்பு ஏற்புடையதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
தனியார் மருத்துவ பாதுகாப்பு சேவையை விருப்பம் போல் விட்டுவிடாமல், அதனை அரசாங்கம் ஒழுங்குபடுத்த வேண்டும் என அவர் சொன்னார்.
போதுமான விதிமுறைகள் இல்லாததால், தனியார் சுகாதாரப் பாதுகாப்பு கட்டணங்கள், கண்மூடித்தனமாக அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தனியார் மருத்துவமனைகளில் கட்டண விதிப்பில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். மேலும் நியாயமான மருத்துவ ஆலோசனை கட்டணங்கள் விதிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
பயனீட்டாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த விவகாரத்தில் விவேகமாக செயல்பட வேண்டும் என டாக்டர் சரவணன் தெரிவித்தார்.


