
சென்னை:
தமிழகத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
வரும் 25 முதல் 28-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இக்காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட குறைய வாய்ப்புள்ளது.
பிப். 22-ஆம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக ஈரோடு, கரூர் பரமத்தியில் தலா 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக பரமத்தியில் 18 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


