
பெட்டாலிங் ஜெயா பிப் 24
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜசெக மத்திய செயலவை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து அக்கட்சியின் உதவி தலைவர் எம். குலசேகரன் விலகிக்கொண்டார்.
இளைய தலைவர்களுக்கு வழி விடும் வகையில் இந்த போட்டியிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக பிரதமர் இலாகா (சட்டம் மற்றும் நீதி சார் சீர்திருத்தம்) துணையமைச்சருமான அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
இருப்பினும் கைதாகிய, நீதிமன்ற விசாரணைகளை எதிர் நோக்கிய மற்றும் மிரட்டல்களுக்கு உட்பட்ட சில தலைவர்களின் தியாகங்களை மறந்து விட வேண்டாம் என கட்சியின் உறுப்பினர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
கட்சி நிகழ்ச்சிகளுக்கும் தேர்தல்களுக்கும் உதவ தங்களின் சொந்த பணத்தை செலவிட்ட சில மூத்த தலைவர்களை அவர் நினைவு கூர்ந்தார்.
இந்த அர்ப்பணிப்பு மிக்க உறுப்பினர்கள் இன்னும் நம்முடன் தான் இருக்கின்றனர். இவர்களின் தியாகங்களை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என ஈப்போ பாரா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
எதிர்வரும் கட்சி தேர்தலில் கடுமையான சவாலை எதிர்நோக்கி உள்ள ஜசெக தலைவர் லிம் குவான் எங்கை இவர் ஆதரிக்கிறார் என்பது தெரிகிறது.
கட்சித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொள்வதாக கட்சியின் தேசிய ஆலோசகர் டான் கோக் வை, தேசிய பொருளாளர் ஃபோங் குய் லிம், மூத்த தலைவர் பீ பூன் ஃபோ ஆகியோரின் அறிவிப்பை தொடர்ந்து, குலாவின் இந்த அறிவிப்பு வெளியாகியது.
சாதாரண நிலையில் உள்ள மலேசியர்களின் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றிற்கு கட்சி தொடர்ந்து போராட வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.


