
கோலாலம்பூர் பிப் 10
இந்நாட்டிலுள்ள தமிழ் கலைஞர்களுக்கு நிச்சயம் நற்செய்தி கிடைக்கும் என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நாட்டில் உள்ள தமிழ் கலைஞர்களின் அர்ப்பணிப்பை இந்திய சமூகம் மறந்துவிடவில்லை என அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு தைப்பூச கொண்டாட்டத்தையோட்டி ஃபாஸ்டெக் குடும்ப நிறுவனம் ஏற்பாடு செய்த தண்ணீர் பந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
இந்நாட்டில் உள்ள தமிழ் கலைஞர்கள் எதிர்நோக்கி வரும் சிரமங்கள் குறித்து ஃபாஸ்டெக் குழும நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோஸ்ரீ அழகேசு தம்மிடம் முறையிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் கலைஞர்களின் நலன்களில் மிகவும் அக்கறை கொண்டுள்ள டத்தோஸ்ரீ அழகேசு அவர்களை தாம் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
சிரமத்தை எதிர்நோக்கும் தமிழ் கலைஞர்களுக்கு ஓடி உதவும் ஒரு நற்பண்பாளர் அவர் என சரஸ்வதி தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழ் கலைஞர்களுக்கு மடானி அரசாங்கத்தின் வழி எப்படி உதவ முடியும் என்பது குறித்து தாம் தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறது.
ஆகையால் நடப்பு ஒற்றுமை அரசாங்கத்தை இந்திய சமூகத்தினர் தொடர்ந்து ஆதரித்து வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
துணையமைச்சர் சரஸ்வதிக்கு துணை நிற்போம்!
இதனிடையே தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமியின் அரசியல் போராட்டங்களுக்கு மக்கள் மீட்சி அமைப்பு துணை நிற்கும் என அதன் தலைவருமான டத்தோஸ்ரீ அழகேசு கூறினார்.
துணையமச்சர் சரஸ்வதி ஒரு துணிச்சலான பெண்மணி.துணையமைச்சர் பதவியை வகிக்கும் முதல் இந்திய பெண்மணி.
நாடு முழுவதும் சென்று குறிப்பாக இந்திய சமூகத்திற்கு தம்மால் இயன்ற அரிய சேவைகளை வழங்கி வருகிறார்.

ஆகையால் இந்த துணிச்சலான பெண்மணிக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
தைப்பூச கொண்டாட்டத்தை முன்னிட்டு ஃபாஸ் டெக் குழும நிறுவனம் தண்ணீர் பந்தல் நிகழ்ச்சியை விமர்சையாக ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்ச்சியில் உள்நாட்டு தமிழ் கலைஞர்கள் அருமையான பாடல்கள் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
ஊர்வலமாக சென்ற பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கப்பட்டது.
துணையமைச்சர் சரஸ்வதி, முன்னாள் வெளியுறவு துணையமைச்சர் கோகிலன்பிள்ளை ஆகியோருக்கு டத்தோஸ்ரீ அழகேசு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.


