
ஜெராம் பாடாங் பிப் 2
ரத்த சுத்திகரிப்பு உதவிக்காக தமது அலுவலகத்தை 5 முறை நாடி வந்த டயாலிசிஸ் நோயாளியை புறக்கணித்த ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினரை பெர்சாத்து கட்சியின் மலாய்காரர்கள் அல்லாதவர் பிரிவின் உதவி தலைவர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கடுமையாக சாடினார்.
கிளமெண்ட் என்ற அந்த டயாலிசிஸ் நோயாளி தமது மனைவி மாயாவுடன் 5 முறை ஜெராம் பாடாங் சட்டமன்ற தொகுதி அலுவலகத்திற்கு சென்றும் அந்த சட்டமன்ற உறுப்பினரை பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை.
இரு முறை 100 வெள்ளியை கொடுத்து கிளமெண்டை அந்த சட்டமன்ற அலுவலக பணியாளர் போக சொல்லி விட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்துள்ள AV Fistula அறுவை சிகிச்சை உதவியை இவருக்கு ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினர் ஏன் வழங்கவில்லை என டத்தோஸ்ரீ சஞ்சீவன் கேள்வி எழுப்பினார்.
இந்த சிகிச்சைக்காக மாநில அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 5 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள தொகையில் தமது தொகுதியை சேர்ந்த ஒருவருக்கு அவசர உதவி வழங்குவதில் ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினர் மெத்தன போக்கை கடைப்பிடித்து வருவது மிகவும் வருந்தத்தக்க ஒரு செயல் என்றார் அவர்.
வருடம் தொடங்கி ஒரு மாத காலம் தான் ஆகிறது. அதற்குள் இந்த சிகிச்சைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு தீர்ந்து விட்டதா? என அவர் கேள்வி எழுப்பினார்.
கிளமெண்ட் வாரத்திற்கு 3 முறை ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
கணவன் மனைவி இருவருமே வேலையில்லாமல் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவர்களின் மகன் ரத்த புற்றுநோய் சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் இவருக்கு உதவுவதில் ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினர் அலட்சிய போக்கை கடைபிடித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று நெகிரி செம்பிலான் மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஹனிபா அபு காக்காருடன் கிளமெண்ட் குடும்பத்தினரை நேரடியாக சந்தித்து நிதி உதவியை தாம் வழங்கியதாக டத்தோஸ்ரீ சஞ்சீவன் கூறினார்.


