
பினாங்கு பிப் 1
எதிர்வரும் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு, அதன் பெருமையையும் இந்துக்களின் புனித சமய விழாவில் தன்மையையும் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக மலேசிய தேசிய குற்றத் தடுப்பு அறவாரியத்தின் தேசிய உச்ச மன்ற உறுப்பினரும், பினாங்கு மாநில குற்றத்தடுப்பு அற வாரியத்தின் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ கா. புலவேந்திரன் வலியுறுத்தினார்.
இந்தப் பெருவிழாவில் எந்தவிதமான குற்ற செயல்களும் நடைபெறாதவாறு உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
பொது மக்களுக்கும், காவல்துறையினருக்கும் பிற அரசு அமைப்புகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் தைப்பூசப் பெருவிழாவின் கண்ணியத்தை காக்கும் பொருட்டு மது அருந்துவதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
தகாத சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க பெண்கள் அதிக நகைகள் அணிவதை தவிர்ப்பது பாதுகாப்பிற்கு அவசியம் ஏன் அவர் தெரிவித்தார்.
மேலும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்களை தவிர்க்க பெற்றோர்கள் தங்களது கை தொலைபேசி எண்ணை குழந்தைகளிடம் எழுதி வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறினார்.
பினாங்கு தைப்பூச பெருவிழா நாட்டில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாகும். ஆகவே இதன் புனித தன்மை மற்றும் அமைதி, ஆன்மீகத் தன்மையை காக்கும் வகையிலான பொறுப்பு நமக்கு உள்ளது என்றும் அதிக அளவிலான எண்ணிக்கையில் சுற்றுப்பயணிகள் வருகை அளிக்கும் தைப்பூச விழா என்பதால் நாம் ஒன்றிணைந்து தைப்பூச விழாவில் புனிதத்தை காப்பதும், தைப்பூச விழாவின் பாதுகாப்பிற்காக கடமையாற்றும் காவல்துறை இருக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவது அனைத்து தரப்பினரின் முக்கிய பொறுப்பு என டத்தோஸ்ரீ புலேந்திரன் கேட்டுக்கொண்டார்.


