
உள்நாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் முதலில் கவனம் செலுத்துமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்மை பெர்சாத்து கட்சியின் மலாய்காரர்கள் அல்லாதவர் பிரிவின் உதவி தலைவர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
கடந்த பொது தேர்தலின் போது பிரதமர் மக்களுக்கு அளித்த பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
காசாவில் அவதியுறும் மக்களுக்கு பள்ளிகள் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிவாசல்கள் கட்டித் தரப்படும் என பிரதமரின் அறிக்கையை குறித்து மேற்கண்டவாறு அவர் கருத்துரைத்தார்.
மனிதாபிமான உதவிகளை தாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
ஆனால் முதலில் மலேசிய மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என அவர் சொன்னார்.
குறிப்பாக சபா மற்றும் சரவாக்கில் வசிக்கும் மக்களில் பலர் இன்னும் அடிப்படை வசதியின்றி வாழ்ந்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இவ்விரு மாநிலங்களில் இன்னும் அதிகமானோர் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதியின்றி சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் இன்னும் எண்ணெய் விலை, கார் விலை குறைக்கப்படவில்லை மற்றும் பிடிபிடிஎன் அகற்றப்படவில்லை போன்ற பல்வேறு பிரச்சனைகளை இங்குள்ள மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
ஆகையால் முதலில் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் பிரதமர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.


