
செப்பாங் ஜன 15
முன்னணி விமான நிறுவனமான பாத்திக் ஏர் கோலாலம்பூரிலிருந்து சரவாக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றான மீரிக்கு நேரடி விமான சேவையை தொடங்கியது.
நேற்று ஜனவரி 14 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து மீரி நகருக்கு பாத்திக் ஏரின் முதல் விமானம் புறப்பட்டது.
கிழக்கு மலேசியாவின் சரவாக் மாநிலத்திற்கு பாத்திக் ஏர் மேற்கொள்ளும் 4 ஆவது விமான சேவை இதுவாகும்.
ஏற்கனவே கூச்சிங், சிபு, பிந்துலு ஆகிய நகர்களுக்கு பாத்திக் ஏர் விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
மீரி அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த பாத்திக் ஏர் பயணிகள் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.
இந்த பயணிகளை சரவாக் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லீ கிம் சின், நிரந்தர செயலாளர் டத்தோ வோங் ஹி சின்,மீரி மேயர் அடாம் யூவ் சீவ் சாங்,மீரி நாடாளுமன்ற உறுப்பினர் சீவ் சோங் மான், சரவாக் சுற்றுலா துறை இயக்குநர் மேரி வான் மெரிங் மற்றும் பாத்திக் ஏர் அதிகாரிகள் வரவேற்றனர்.

இதனிடையே சுற்றுலா மற்றும் முதலீட்டுக்கு சரவாக் ஒரு முக்கிய மையமாக விளங்கி வருவதை பாத்திக் ஏரின் இந்த புதிய விமான சேவை உறுதிப்படுத்துவதாக அந்த விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
இந்த புதிய விமான சேவையின் மூலம் சரவாக்கின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குவதில் தமது நிறுவனம் பெருமை கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மீரி ஒரு துடிப்புடன் செயல்பட்டு வரும் நகரம் என்பதால் தீபகற்ப மலேசிய பயணிகள் அங்கு செல்ல ஆர்வம் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மீர் சரவாக் மாநிலத்திற்கு வடபகுதி நுழைவாயில் என்பதால், இங்கு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே கடந்த 2024 ஆம் ஆண்டில் 11 லட்சம் சுற்றுப்பயணிகள் இந்நகருக்கு வருகை புரிந்துள்ளதாக சரவாக் சுற்றுலாத்துறை வாரியம் கூறியது.
இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் இந்த சுற்று பயணிகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பாத்திக் ஏர் கோலாலம்பூரிலிருந்து மீரிக்கு தினசரி இரு முறை விமான சேவைகளை மேற்கொள்ளும்.
இதன் வழி வாரத்திற்கு மீரி நகருக்கு 14 விமான சேவைகளை மேற்கொள்ளும்.


