
புத்ரா ஜெயா ஜன 6
வழிபாட்டு தலங்களில் அரசியல் நடவடிக்கைகளை நடத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி நினைவுறுத்தினார்.
இன்று ஜன 6 திங்கட்கிழமை முன்னாள் பிரதமர் நஜீப் ராசாக்கின் நீதிமன்ற வழக்கு விசாரணையை முன்னிட்டு பத்து மலை திருத்தளத்தில் அந்த முன்னாள் பிரதமருக்கு ஆதரவாக ஒரு சிறப்பு பிரார்த்தனையை கூட்டத்தை நடத்த மஇகா திட்டமிட்டுள்ளது குறித்து அவர் கருத்துரைத்தார்.
ஆலய வளாகங்களில் அரசியல் நோக்கிலான இது போன்ற நடவடிக்கைகளை தாம் வன்மையாக கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
காரணம் ஆலய வளாகங்களில் சமய, சமூகநல மற்றும் சமூகம் அடிப்படையிலான நடவடிக்கைகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அரசியல் நோக்கங்களிலிருந்து வழிபாட்டுத்தலங்கள் விடுபட வேண்டும். இந்நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களை கண்காணித்து வரும் சமூக தலைவர்கள் மற்றும் ஆலய நிர்வாகங்கள் அரசியல் தலையீடு தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
ஒரு கைதியின் பொது மன்னிப்பு குறித்து அரண்மனை அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும்.
கூட்டரசு சட்டத்தின் 42(1) மற்றும் (2) பிரிவின் கீழ் பேரரசருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு ஏற்ப நஜிப் ஆதரவு பேரணி நடத்தக்கூடாது என போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் அறிக்கைக்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஆகையால் வழிபாட்டுத்தலங்கள் நடு நிலையாக இருப்பதை உறுதி செய்ய தலைவர்கள் மற்றும் ஆலய நிர்வாகங்கள் அரசியல் பாகுபாடு இன்றி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார். இதனிடையே நஜீப் ஆதரவு பேரணியை அம்னோ கைவிட்டதை தொடர்ந்து, பத்து மலை திருத்தளத்தில் நஜீப்பிற்கு ஆதரவாக ஒரு சிறப்பு பிரார்த்தனையை மஇகா நடத்தும் என அக்கட்சியின் தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறியுள்ளார்.


