
ஜொகூர் பாரு டிச 31
ஜொகூர் பாருவில் நடைபெற்று முடிந்த 2024 ஜொகூர் கைவினை கண்காட்சி இதர மாநிலங்களுக்கு ஒரு முன் மாதிரியாக விளங்குவதாக பாக்காத்தான் ஹராப்பன் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் கூறினார்.
19 டிசம்பர் முதல் 30 டிசம்பர் வரை 11 நாட்களுக்கு நடந்த இந்த கைவினை கண்காட்சி சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் வருகையாளர்களை கவர்ந்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது என்றார் அவர்.
மலேசிய கைவினை மேற்பாட்டு கழகத்தின் ஜொகூர் கிளை ஏற்பாடு செய்திருந்த இந்த கைவினை கண்காட்சிக்கு தமக்கு அழைப்பு விட்டதை தொடர்ந்து தாம் அங்கு சென்றதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த கைவினை கண்காட்சியில் இனப் பாகுபாடு இன்றி அனைத்து இனத்தவர்களின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது இந்த நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
மலாய்காரர்கள், இந்தியர்கள் மற்றும் சீனர்கள் போன்ற இனத்தவர்களின் கைவினைப் பொருட்கள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டு தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஜொகூரில் உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுபோன்ற கண்காட்சியில் பங்கு பெற்று மக்களிடையே தங்களின் செல்வாக்கை பெருக்கிக் கொள்ளலாம் என அவர் ஆலோசனை கூறினார்.
இந்த கண்காட்சியில் குறிப்பாக பாத்திக் சட்டைகள் குறைந்த விலையில் விற்கப்படுவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. காரணம் இதுபோன்ற குறைந்த விலையில் வெளியில் இந்த சட்டைகளை வாங்க முடியாது என்றார் அவர். பல சிறப்புகளை பிரதிபலிக்கும் இது போன்ற கைவினை கண்காட்சி நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடத்துவது குறித்து மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருணுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அவர் சொன்னார்.
இந்த விவகாரம் குறித்து மந்திரி பெசாருக்கு தாம் உடனடியாக கடிதம் எழுதப் போவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து நெகிரி செம்பிலான் மாநில சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார பிரிவின் ஆட்சி குழு உறுப்பினர் நிக் கோல் தானுடன் தொடர்பு கொண்டு பேசியதாக குணா தெரிவித்தார்.


