
நைரோபி நவ 21
உலகின் தலைசிறந்த மலிவு விலை கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா எக்ஸின் கோலாலம்பூர்-நைரோபிக்கான நேரடி விமான சேவை மலேசியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கிடையே வர்த்தக மற்றும் தூதரக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என மலேசியாவிற்கான கென்யா நாட்டு தூதர் ரூஸாய்மி முகமட் கூறினார்.
மலேசியா மற்றும் கென்யா நாடுகளுக்கிடையே தூதரக உறவு அடுத்த ஆண்டு 60 ஆம் ஆண்டில் கால் பதிப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 15 நவம்பர் ஏர் ஆசியா எக்ஸின் நைரோபிக்கான நேரடி விமான சேவை கொண்டாட்டத்தையொட்டி ஏர் ஆசியா எக்ஸ் உயர்நிலை அதிகாரிகள், மலேசிய ஊடகவியலாளர்கள் மற்றும் இதர பிரமுகர்களுக்கு இங்குள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் வழங்கிய இரவு விருந்து நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு ஏர் ஆசியா எக்ஸின் இந்த நேரடி இடைநில்லா விமான சேவை வரலாற்று பூர்விகமிக்க ஒன்று என அவர் சுட்டி காட்டினார். சரியான மற்றும் பொருத்தமான காலகட்டத்தில் ஏர் ஆசியா எக்ஸின் இந்த நேரடி விமான சேவை இரு நாடுகளின் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார துறைகளை தொடர்ந்து வலுப்பெற செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆப்பிரிக்கா கண்டத்தில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான கென்யா இயற்கை வளங்களை கொண்ட ஒரு நாடாகும்.
மலேசிய முதலீட்டாளர்கள் இந்நாட்டில் முதலீடுகளை செய்ய அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றது.
மலேசிய முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள ஏர் ஆசியா எக்ஸின் இந்நேரடி விமான சேவை உறுதுணையாக இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இதற்கு முன்னர் நைரோபிக்கு பயணிக்க விரும்பும் சுற்றுப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மூன்றாம் நாடுகளுக்குச் சென்றே நைரோபியை வந்தடைய முடியும்.
இந்த பயணத்திற்கு குறைந்தது ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தேவைப்படும்.
ஆனால் ஏர் ஆசியா எக்ஸின் இந்த இடைநில்லா விமான சேவை மூலம் சுமார் 9 மணி நேரங்களில் நைரோபியின் ஜோமொ கென்யாத்தா அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைய முடியும் என அவர் சொன்னார்.
விவசாயத்திற்கு முன்னணியாக விளங்கி வரும் நைரோபியிலிருந்து அதிகமான பூக்கள் மலேசியாவிற்கு தினமும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். மலேசியா முதலீட்டாளர்களுக்கு கென்யாவில் கட்டுமானம், விவசாயம் உட்பட பல்வேறு தொழில் துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.

ஏர் ஆசியாவின் இந்த நேரடி விமான சேவையை இவர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளலாம் என கிழக்கு ஆப்பிரிக்காவின் புருன்டி, தென் சூடான், ருவாண்டா,தன்ஜானியா, மற்றும் உகண்டா ஆகிய நாடுகளுக்கான மலேசியாவின் இணைதருமான ருசாய்னி குறிப்பிட்டார்.
இதனிடையே நைரோபிக்கான இந்த விமான சேவையை ஆசியா மற்றும் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஏர் ஆசியா எக்ஸ் தலைமை செயல்முறை அதிகாரி பென்யாமின் இஸ்மாயில் கூறினார்.
கிழக்க ஆப்பிரிக்காவிற்கான இந்த நேரடி விமான சேவை ஒரு வரலாற்று பூர்வமான ஒன்று என அவர் சொன்னார்.
இந்த புதிய விமான சேவையை தொடர்ந்து ஆப்பிரிக்காவில் இன்னும் பல நகர்களுக்கு விமான சேவையை மேற்கொள்ள ஏர் ஆசியா எக்ஸ் வியூகம் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

ஏர் ஆசியா எக்ஸ் தற்போது நைரோபிக்கு வாரத்திற்கு 4 விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
தேவைகள் அதிகரித்தால் நைரோபிக்கு தினசரி விமான சேவையை ஏர் ஆசியா எக்ஸ் மேற்கொள்ளும் என அவர் சொன்னார்.


