
பாக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி அரசியல் கூட்டணிகள் தங்களின் ஆட்சியில் இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தை புறக்கணித்து விட்டதாக பெர்சாத்து கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கூறினார்.
இவ்விரு அரசியல் கூட்டணிகள் தங்களின் ஆட்சியில் இந்திய சமூகத்திற்கு இனிப்பான வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆகையால் இந்திய சமூகத்தினர் தங்களின் உரிமைகளை மீட்டெடுக்க விரைவில் நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான், ஜொகூர் மற்றும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அனைவரும் ஒன்றிணைந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என பெர்சாத்து கட்சியின் பெர்செக்குத்து பிரிவின் தலைவருமான அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நாட்டில் பல ஆண்டுகளாக பாக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி அரசாங்கங்களுக்கு இந்திய சமூகத்தினர் பிளவுபடாத ஆதரவை வழங்கி வந்துள்ளனர்.
ஆனால் தேர்தல் காலங்களில் இந்திய சமூகத்தின் வாக்குகளை பெறுவதில் மட்டுமே இவ்விரு கூட்டணியும் நோக்கமாக கொண்டிருந்து வந்துள்ளது.
தேர்தலுக்குப் பிறகு தங்களின் ஆட்சி காலத்தில் இந்திய சமூகத்தின் நலன்களை இவ்விரு கூட்டணிகளும் புறக்கணித்து வந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த கூட்டணிகளின் ஆட்சியில் இந்திய சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதாரத் துறையில் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை.
நமது இந்திய சமுதாயம் இன மற்றும் மத ஒற்றுமைக்கு முக்கியத்துவம் வழங்கி வந்ததில்லை என்றார் அவர்.
மலாய் மற்றும் சீனு சமூகங்கள் தங்களின் இன மற்றும் மத ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் நமது இந்திய சமூகம் இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இன மற்றும் மத ஒற்றுமையை நமது பலம் என்பதை இந்திய சமூகம் நுண்ணிப்பாக உணர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஆகையால் விரைவில் நடைபெறவருக்கும் இம்மூன்று மாநில சட்டமன்ற தேர்தல்களில் இந்தியர்களின் ஆதரவை தாங்கள் இழந்துவிட்டனர் என்பதை இவ்விரு அரசியல் கூட்டணிகளும் உணரும் வகையில் இந்திய வாக்காளர்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மாற்றம் இருந்தால் தான் இந்திய சமூகம் அடுத்த கட்ட வளர்ச்சியை அடி எடுத்து வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.


