
சிங்கப்பூர் நவ 7
சிங்கப்பூருக்கான விமான சேவையின் 10 ஆவது நிறைவு விழாவை பாத்திக் ஏர் மற்றும் சாங்கி விமான நிலைய குழும நிறுவனம் கொண்டாடியது.
கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நகரங்களுக்கிடையே பாத்திக் ஏரின் விமான சேவையின் வலிமையை இந்த கொண்டாட்டம் நினைவுத்தியது.
கடந்த 3 நவம்பர் 2014 ஆம் ஆண்டு கோலாலம்பூர்-சிங்கப்பூர் விமான சேவையை பாத்திக் ஏர் தொடங்கியது முதல் இவ்விரு நகரங்களுக்கு இடையே அணுக்கமான ஒத்துழைப்பு, சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தக வாய்ப்புகளை வலுப்படுத்துவதில் பாத்திக் ஏர் வெற்றி கண்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இவ்விரு நகரங்களுக்கு இடையே விமான போக்குவரத்து சேவையை அதிகரிப்பதிலும், உறவை வலுப்படுத்துவதிலும் பாத்திக் ஏர் முன்னுரிமை வழங்கி வந்துள்ளது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கேஎல்ஐஏ)-சாங்கி அனைத்துலக விமான நிலையத்திற்கு இடையே வாரத்திற்கு 28 விமான சேவைகளை பாத்திக் ஏர் மேற்கொண்டு வருகிறது.
இந்த துரித விமான சேவை பயணிகளுக்கு அனைத்து சௌகரியங்களையும் ஏற்படுத்தி தந்துள்ளது.இதனிடையே இந்த 10 ஆண்டுகளில் இப்பிராந்தியத்தில் விமான போக்குவரத்து சேவையை இணைப்பதில் பாத்திக் ஏர் முக்கிய பங்காற்றியுள்ளதாக பாத்திக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
பாத்திக் ஏர் சிங்கப்பூர் சாங்கி விமான நிறுவனத்துடன் இணைந்து பயணிகளுக்கு அற்புதமான அனுபவத்தை தந்துள்ளதாக அவர் சொன்னார்.
இவ்விரு தரப்பினரின் கைகோர்ப்பின் மூலம் கோலாலம்பூர் மட்டும் சிங்கப்பூருக்கு இடையே வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை வலுவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூருக்கான தனது விமான சேவை வரும் காலங்களில் பாத்திக் ஏர் தொடர்ந்து அதிகரித்து வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதே வேளையில் ஆசியான் மற்றும் ஆசிய நாடுகளுக்கான தனது விமான சேவையை விஸ்தரிக்க பாத்திக் ஏர் வியூகத் திட்டங்களை வகுத்து வருவதாக டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.

இதனிடையே இந்த நிறைவு விழா கொண்டாட்டத்தை மகிழ்ச்சியுடன் தாங்கள் வரவேற்பதாக சாங்கி விமான நிறுவனத்தின் அதிகாரி லிம் சிங் கியாட் தெரிவித்தார்.
கோலாலம்பூர்-சிங்கப்பூருக்கான பாத்திக் ஏரின் சேவை மிக விறுவிறுப்பான அனைத்துலக விமான பயணிகள் சேவை என அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 10 ஆண்டுகளில் பாத்திக் ஏர் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை நெருக்கமான நிலைக்கு கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த 10 ஆவது நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சாங்கி விமான நிலையத்தில் பாத்திக் ஏர் பயணிகளுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்பட்டன.



