Sunday, May 31, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

திரைத்துறையினர் ஒன்று கூடிய பிரம்மாண்ட விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது அறிவிப்பு!

2025ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான 18வது ஆண்டு எடிசன் திரைப்பட விருதுகள் 2026 விழா, நேற்று (மே 24, 2026) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. திரைப்படத் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்த நாற்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் பல்வேறு பிரிவுகளில் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த பிரம்மாண்ட விழாவில் மலேசிய துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ், ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் தூதர்கள், தொழிலதிபர்கள் ஏ2பி சீனிவாசன், லீமா ரோஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் புதிய விருது பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. எடிசன் விருதுகளின் சேர்மன் செல்வகுமார் அறிவித்ததாவது, அடுத்த ஆண்டு முதல் விஜய் பெயரில் ஒரு சிறப்பு விருது அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டு எடிசன் திரைப்பட விருதுகளில் வழங்கப்படும் என்றார்.

மேலும் இந்த நிகழ்வின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் ‘எடிசன் மில்லியனரி கிளப் ‘ அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பேசிய எடிசன் விருதுகள் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி செல்வகுமார், உலகின் பல நாடுகளில் எடிசன் விருதுகளை விரிவுபடுத்துவதற்கும், உலகம் முழுவதிலும் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் பிசினஸ் செயவர்களை ஒன்றிணைப்பதற்குமான தளமாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவை உலக அரங்கில் உயர்த்தும் நோக்கம் கொண்டுள்ளதாகவும் மேலும் சர்வதேச தொடர்புகள் துறைக்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் முக்கிய விருதுகளில், ‘பைசன்’ திரைப்படத்திற்காக துருவ் விக்ரம் சிறந்த நடிகர் விருதையும், அதே படத்திற்காக மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர் விருதையும் பெற்றனர். ‘ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படத்திற்காக ரியோ ராஜ் இந்த வருடத்தின் சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான விருது பெற்றார். பின்னணிப் பாடகர்களில், டிராகன் திரைப்படத்தின் ‘வழித்துணையே…’ பாடலுக்காக சஞ்சனா கல்மன்ஜே சிறந்த பெண் பின்னணிப் பாடகி விருதையும், மதராசி திரைப்படத்தின் ‘தங்கப்பூவே…’ பாடலுக்காக ரவி ஜி சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் விருதையும் பெற்றனர்.

‘மாமன்’ திரைப்படத்திற்காக ஸ்வாசிகா சிறந்த கதாபாத்திர நடிகை விருதைப் பெற்றார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக விஜய் வேலுக்குட்டி சிறந்த எடிட்டர் விருதையும், அர்ஜுன் தாஸ் சிறந்த வில்லன் நடிகர் விருதையும் வென்றனர். இளம் நடிகர்களில், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்திற்காக பவிஷ் நாராயண் சிறந்த அறிமுக நடிகர் விருதையும், ‘சிறை’ திரைப்படத்திற்காக அனிஷ்மா அனில்குமார் சிறந்த அறிமுக நடிகை விருதையும் பெற்றனர். ஜூரி விருதுகள் பிரிவில் இந்திய திரைப்பட உலகின் பல முக்கிய கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். நடிகர் டத்தோ ராதாரவி ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற்றார். நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், ‘பீனிக்ஸ்’ மற்றும் ‘தி வெர்டிக்ட்’ திரைப்படங்களுக்காக டைனமிக் பெர்ஃபார்மர் விருது பெற்றார். இந்த விருதை அவரது தாய் சாயா பெற்றுக்கொண்டார்.

பாடகி சைந்தவி ‘தி வாய்ஸ் பியாண்ட் பவுண்டரிஸ்’ விருது பெற்றார். நாட்டுப்புறப் பாடகர் அந்தோணி தாசன் ‘வாய்ஸ் ஆஃப் டிரெடிஷன்’ விருது பெற்றார். மூத்த நடிகர் தம்பி ராமையா, ‘முதல் பக்கம்’ திரைப்படத்திற்காக ‘வெட்ரன் பர்ஃபாமெர் அவார்ட்’ பெற்றார்.

எடிசன் விருதுகள் தலைவர் செல்வகுமார் மற்றும் நடுவர் குழுவினருக்கு விருது பெற்ற பலரும் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர். இந்த அங்கீகாரம் தங்களது கலைப் பயணத்தில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும், தொடர்ந்து திரைப்படத் திறமைகளை கௌரவித்து வரும் எடிசன் விருதுகள் மீது பெருமை கொள்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

இந்த ஆண்டின் எடிசன் திரைப்பட விருதுகள், தமிழ் சினிமாவின் சிறப்பை மீண்டும் ஒருமுறை உலகிற்கு எடுத்துக்காட்டியதுடன், அதன் சாதனைகளை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல புதிய வாயில்களையும் திறந்து வைத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular