
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒற்றுமை அரசாங்கத்திற்கு அம்னோ தொடர்ந்து ஆதரவளிக்கும் என அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மாநில அம்னோ தலைவர்களில் சிலர் வெளியிட்ட கருத்துகள் வேறுபட்டதாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக மாறும் எண்ணம் கட்சிக்கு இல்லை என்றும், கட்சிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் அம்னோவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அம்னோவின் 14 மாநில சட்டமன்ற உறுப்பினர்களும், தற்போதைய மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருணை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்பதே கட்சியின் உச்சமன்ற முடிவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
துணைப் பிரதமருமான சாஹிட், அரசியல் நிலைத்தன்மையை பேணுவது மிக முக்கியம் என வலியுறுத்தினார்.
இதற்கிடையில், நெகிரி செம்பிலான் சமஸ்தானாதிபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை பதவியில் இருந்து நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் அரசியல் சூழ்நிலையை சமாளிக்க, அங்கு PH-BN இணைந்து அமைத்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தை காக்க தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.


