
கோலாலம்பூர் ஆக 5
கடந்த சில தினங்களுக்கு முன்பு கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஜாக்கார்த்தா விமான நிலையம் வந்தடைந்த மாஸ் விமானத்தின் விமானி போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக மலேசிய மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அழகேசு கூறினார்.
இந்த சம்பவம் முழுக்க முழுக்க கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பாதுகாப்பு பரிசோதனையில் ஏற்பட்டுள்ள அலட்சியப் போக்கை காட்டுவதாக அவர் சுட்டிக் காட்டினார். ஒரு விமானி 70,000 போதை மாத்திரைகள் மற்றும் 2.7 கிராம் மெதாம்பெத்தாமினா போதை பொருளை பாதுகாப்பு பரிசோதனையிந்து எப்படி கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை அனைவரின் கேள்வி என்றார் அவர்.
170 பயணிகளுடன் விமானத்தை செலுத்தி ஜாக்கார்த்தா சுக்கார்னோ ஹத்தா அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த அந்த 39 வயதுடைய மாஸ் விமானி,அங்கு பாதுகாப்பு பரிசோதனையின் போது கைது செய்யப்பட்டார்.
இந்த கைது சம்பவத்தை தொடர்ந்து, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய பாதுகாப்பு பரிசோதனை நடைமுறையில் தவறு எதுவும் இல்லை என மலேசிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு
(AKPS) பிரிவின் தலைமை இயக்குனர் சுஹாய்லி ஜைன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் எந்தவித விசாரணையும் நடத்தாமல் உடனடியாக இவர் மறுப்பு தெரிவித்துள்ளது விந்தையாக இருப்பதாக டத்தோஸ்ரீ அழகேசு குறிப்பிட்டார்.
அந்த மாஸ் விமானி செய்துள்ள தவறு சாதாரணமான ஒன்றல்ல.
தாம் கொண்டு சென்ற போதை மாத்திரைகள் மற்றும் போதை பொருள் இந்தோனேசியாவில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டால் தமக்கு வெ50,000 வழங்கப்படும் என அந்த மாஸ் விமானி விசாரணையின் போது விளக்கம் தந்துள்ளதாக தெரிகிறது.
அந்த விமானி புரிந்துள்ள இந்த செயல் மாஸ் விமான நிறுவனத்திற்கும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பாதுகாப்பு முறைக்கும் கலங்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரம் குறித்து போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் ஏன் இன்னும் கருத்துரைக்கவில்லை என அவர் வினவினார்.


