
மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என திரங்கானு மந்திரி பெசாரின் மலாய்காரர்கள் அல்லாதவர்கள் பிரிவின் சிறப்பு அதிகாரி டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
இந்த விவகாரத்தில் சாலை போக்குவரத்து இலாக்கா மெத்தன போக்கை கடைப்பிடிக்க கூடாது என அவர் வலியுறுத்தினார்.
அண்மையில் மது போதை மற்றும் போதை பொருள் உட்கொண்ட ஒருவர் வாகனத்தை ஓட்டி ஒரு உயிர் பலியான சம்பவம் மிகவும் வருத்தத்தை அளிப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த சம்பவம் ஒரு விபத்து என்று கூறுவதை விட, ஒரு நொடியில் ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டு விட்டது என்பது தான் உண்மையாகும்.
இந்த கொடூர சம்பவத்தால் ஒரு தாய் மகனை இழந்து விட்டார். ஒரு மனைவி தமது அன்பு கணவரை இழந்துவிட்டார்.
அதே வேளையில் 3 பிள்ளைகள் ஒரு தந்தையின் பாசம் மற்றும் பராமரிப்பு இன்றி வளரும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இது ஒரு கொடூரமான சம்பவம் என்று தான் கூற வேண்டும் என பாஸ் ஆதரவு பேரவையின் தகவல் பிரிவு தலைவருமான அவர் சொன்னார்.
மது போதை அல்லது போதைப் பொருள் உட்கொண்டு ஒருவர் வாகனத்தை செலுத்துவது ஒரு கடுமையான செயல் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இது போன்று ஒழுக்கம் தவறிய செயல்களால் உயிர்கள் தான் பலியாகின்றன என்றார் அவர்.
இது போன்று கொடூர சம்பவங்கள் நடக்காமல் இருக்க, குறிப்பாக போக்குவரத்து அமைச்சு கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
இந்த கொடூர செயலை புரியும் நபர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
சாலையில் பயணம் செய்யும் ஒவ்வொரு உயிருக்கும் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


