
கூலாய் – இவ்வாண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நிலவரப்படி, கூலாய் நாடாளுமன்றப் பகுதியில் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்களுக்கு ரி.ம. 55,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் அறிவித்தார்.
இந்த ஒதுக்கீடு முழு ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்தவர்களுக்கு வழங்கப்பட்டதாக அவர் கூறினார். ஆகவே, கூலாய் நாடாளுமன்றத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஆலயங்களும் மற்றும் அரசு சாரா இயக்கங்களும் அந்நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வரவேற்க்கப்படுவதாக தியோ தெரிவித்தார்.
“நல்லிணக்கமும், ஒற்றுமையும் நாட்டின் முக்கிய தூண்கள். எனவே, கூலாய் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்ய, அரசியல் அல்லது இனப் பின்னணியைப் பார்க்காமல் ஒவ்வொரு ஆண்டும் அனைவருக்குமான ஒதுக்கீடுகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன,” என உறுதியளித்தார்.

தொடர்பு துணையச்சருமான தியோ, முன்னதாக கூலாய், பண்டார் புத்ரா, தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 62வது வருடாந்த திருவிழா மற்றும் கூலாய் பெசார், தேவி ஸ்ரீ வட பத்திர காளியம்மன் ஆலய 51வது வருடாந்த திருவிழாவிலும் கலந்து சிறப்பித்தார்.
இதில் கூலாய், பண்டார் புத்ரா, தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு ரி.ம. 20,000 மற்றும் கூலாய் பெசார், தேவி ஸ்ரீ வட பத்திர காளியம்மன் ஆலயத்திற்கு ரி.ம. 5,000 நிதியுதவியும் வழங்கப்பட்டது.
“வழிபாட்டுத் தளங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆலய வசதிகளை மேம்படுத்தவும், பக்தர்கள் அனைவருடனும் இந்த வருடாந்த திருவிழாவில் கலந்து கொண்டதும் எனது ஆதரவின் அடையாளமாகும். இந்த முயற்சி சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதுடன், பாரம்பரியத்தையுமபாதுகாக்கும் என நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், கடந்தாண்டு 17 ஆலயங்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்களுக்கு ரி.ம. 59,000 ஒதுக்கப்பட்ட வேளை, வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சின் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்பு செலவிற்காக ரி.ம. 186,500 கூலாய் நாடாளுமன்றத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


