
கோலாலம்பூர் ஆக 13
இந்தியர்களின் உருமாற்று பிரிவான மித்ராவின் தோல்விக்கு மடானி அரசாங்கத்தில் உள்ள அனைத்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டும் என பெர்சாத்து கட்சியின் மலாய்காரர்கள் அல்லாதவர் பிரிவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கூறினார்.
வறுமைக் கோட்டில் உள்ள இந்திய சமூகத்தின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் மித்ரா தோல்வி அடைந்து விட்டதாக நேற்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவின் உரை இதற்கு சான்று என அவர் சுட்டிக் காட்டினார்.
மித்ரா விவகாரத்தில் நடப்பு அரசாங்கத்தில் உள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறக்காமல் இருப்பது வெட்கக்கேடான ஒரு செயல் என்றார் அவர்.
தலைமைத்துவத்திற்கு ஆமாம் சாமி போட்டுக்கொண்டு இந்திய சமூகத்தின் பிரச்சினைகளை பற்றி இவர்கள் கேள்வி எழுப்புவது இல்லை என அவர் சொன்னார்.
மித்ராவின் ஒவ்வொரு காசும் ஏழை பிள்ளைகளுக்கு, தனித்து வாழும் தாய்மார்களுக்கு மற்றும் ஏழை குடும்பங்களுக்கு தான் போய் சேர்ந்து இருக்க வேண்டும்.

ஆனால் மித்ராவை நிர்வாகம் செய்தவர்கள் அப்படி எதையும் செய்யவில்லை என்பது தான் உண்மை என்றார் அவர்.
ஆனால் மித்ராவின் பணம் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு தான் போய் சேர்ந்து இருக்கிறது என்பது தான் உண்மையான நிலவரம் என அவர் சுட்டிக் காட்டினார்.
மித்ராவின் இந்த தோல்வியை பற்றி அரசாங்கத்தில் உள்ள இந்திய எம்பிக்கள் வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகின்றனர் என அவர் சாடினார்.
மித்ராவின் பலவீனம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை பற்றி இந்திய எம்பிக்கள் கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதுவரை செலவிடப்பட்ட மித்ராவின் பணம் குறித்து நிதி ஆய்வு செய்வதை இந்த அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என அவர் பரிந்துரை செய்தார்.
மித்ராவின் கீழ் ஏழை இந்தியர்களுக்கு போய் சேராத திட்டங்கள் பொதுவில் அம்பலப்படுத்த வேண்டும்.
அரசாங்கத்தில் உள்ள இந்தி எம்பி எம்பிக்கள் தங்களின் அரசியல் நாடகங்களை நிறுத்திக் கொண்டு, வாக்காளர்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் சொன்னார்.
அதே வேளையில் இந்திய சமூகத்திற்காக குரல் கொடுக்க தைரியம் இல்லாத இந்தி எம்பிக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும் அரசியல் செல்வாக்கை பெறுவதற்காக மித்ராவை பற்றி பேசுவதை இந்திய எம்பிக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என பெர்சாத்து கட்சியின் உச்ச மன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சஞ்சீவன் தெரிவித்தார்.


