
மலேசிய ஊடக மன்ற வாரிய உறுப்பினர்கள் அன்மையில் தங்கள் நியமனக் கடிதங்களை அதிகாரப்பூர்வமாகப் பெற்றது, நாட்டின் ஊடகத் துறைக்கு கிடைத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமைந்துள்ளது.
சுயமாக தனித்து செயல்படும் ஆற்றலை இம்மன்றம் தற்போது பெற்றுள்ளது. அதோடு, நீண்ட கால முயற்சிக்குப் பின்னர், இம்மன்றம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் சுட்டிக் காட்டினார்.
“மலேசிய ஊடக மன்றம் நிறுவுவதற்கான யோசனை 1970 களில் தொடங்கியது. 2019 இல் உயிர்ப்பிக்கப்பட்டு, பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது. தற்போது இம்மன்றம் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்ட நகர்தலை முன்னோக்கி எடுத்துச் செல்லும் வாரிய உறுப்பினர்களிடம் நியமனக் கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்று அவர் கூறினார்.
இது வெறும் அடையாள நிகழ்வு மட்டுமல்ல, நாட்டின் ஊடக நிலப்பரப்பில் ஒரு புதிய சகாப்தத்திற்கான தொடக்கப் புள்ளியாகும் என, கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ தெரிவித்தார்.
“நாட்டின் முன்னனி ஊடகங்கள், சுயமாக செயல்படும் ஊடகங்கள், ஊடக பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் ஊடக நெறிமுறை, சுதந்திரம் மற்றும் மீள்தன்மை ஆகியவை இருப்பதை உறுதிசெய்ய, மலேசிய ஊடக மன்றம் ஒன்றிணைந்து செயல்படும் ஒரு தளமாக இருக்கும்” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இம்மன்றம் வரும் நவம்பரில் அதன் முதல் பொதுக் கூட்டத்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், மக்களுக்கு நம்பகத்தன்மையான ஊடக மன்றத்தை உருவாக்கும் நோக்கில், தொழில்துறை நடத்தை விதிகளும், புகார்களை கையாள்வதற்கான வழிமுறைகளும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய ஊடக மன்றத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் துணையமைச்சர் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.


