
700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எஸ்டிபிஎம் தமிழ்மொழி பாட வழிகாட்டி நூல்கள் வழங்கப்படும் என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
மலேசிய உலக தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் முயற்சியில் இந்த வழிகாட்டி நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று இங்கு இந்த வழிகாட்டி நூல் வெளியீடு நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
அரசாங்க உயர் கல்வி நிலையங்களில் இணைவதற்கு எஸ்டிபிஎம் ஒரு சரியான தேர்வு என அவர் குறிப்பிட்டார்.
எஸ்டிபிஎம் தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக தேர்ந்தெடுத்துள்ள மாணவர்களுக்கு தமது பாராட்டுக்கள் என்றார் அவர்.
டாக்டர் கந்தசாமி தலைமையிலான மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் இந்த முயற்சியை தாம் வெகுவாக பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் குறித்து டாக்டர் கந்தசாமி தம்மிடம் விரிவாக பேசியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த வழிகாட்டி நூல்கள் எஸ்டிபிஎம் தேர்வில் தமிழ் மொழியை தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றார் அவர்.
இது ஒரு மகத்தான திட்டமாகும். இந்த வழிகாட்டி நூல் சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என அவர் சொன்னார்.
‘எனது தனிப்பட்ட நிதியின் மூலம் இந்த திட்டத்திற்கு நான் உதவி வழங்கினேன்’ என அவர் சுட்டிக் காட்டினார்.
எஸ்டிபிஎம் தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் இந்திய மாணவர்கள் சிறந்த தேர்ச்சியை பெற உதவியாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நமது இந்திய மாணவர்கள் எஸ்டிபிஎம் தேர்வில் தமிழ் மொழி பாடத்தை ஒரு பாடமாக தேர்வு செய்ய வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
நாட்டில் நமது தமிழ் மொழி காக்கப்படுவதற்கு இது உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.


