
இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி) விதிக்க அரசாங்கத்தின் நடவடிக்கை நியாயமற்றது என மலேசிய பயனீட்டாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் (போம்கா) சாடியது.
இறக்குமதி செய்யப்படும் பழ வகைகளுக்கு எஸ்எஸ்டி விதிக்கப்பட்டால் பழங்களின் விலை அதிகரிக்கும் என போம்கா தலைவர் டத்தோ டாக்டர் மாரிமுத்து நடேசன் கூறினார்.
உடல் ஆரோக்கியமாக இருக்க மக்கள் பழங்களை உட்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் பிரச்சாரத்திற்கு அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை முரண்பாடாக இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இறக்குமதி செய்யப்படும் பழ வகைகளின் விலை உயர்வு கண்டால் பாமர மக்கள் இந்த பழ வகைகளை வாங்குவதில் சிரமத்தை எதிர்நோக்குவார்கள் என்றார் அவர்.
ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் வாழைப்பழம் போன்ற பழங்களுக்கு எஸ்எஸ்டி விதிக்கப்படலாம் என அண்மையில் அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த பரிந்துரைக்கு பொதுமக்கள் மற்றும் பல பொது இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் குறிப்பாக பி40 தரப்பினர் சிரமத்தை எதிர் நோக்குவார்கள் என டத்தோ மாரிமுத்து குறிப்பிட்டார்.
பொருட்கள் வெளியேற்றத்தால் குறிப்பாக பாமர மக்கள் தற்போது பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் இறக்குமதி செய்யப்படும் பழ வகைகளுக்கு எஸ்எஸ்டி விதிக்கப்பட்டால் இவர்களின் சுமை மேலும் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் மக்களின் உடல் ஆரோக்கியத்தில் அரசாங்கத்திற்கு அக்கறை இல்லை என்பதை உணர்த்துவதாக அவர் சொன்னார்.
அரசாங்கத்தின் இந்து நடவடிக்கையின் காரணமாக மக்கள் சத்துக் குறைவான பழங்களை உட்கொள்வதால், அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்பற்ற தனமாக நடந்து கொள்வதாக அவர் சாடினார்.
மக்களின் நலன்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் நடப்ப அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.


