
இன்று மே 23 வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் பிகேஆர் தலைமைத்துவ தேர்தலில் துணைத் தலைவர் பதவியை தற்காக்கும் ராபிஸி ரம்லி தோல்வியுற்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறியுள்ளதை தொடர்ந்து, உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் அவ்வாறு செய்வாரா என பெர்சாத்து கட்சியின் மலாய்காரர்கள் அல்லாதவர் பிரிவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
ராபிஸி அணியில் உதவித் தலைவர் பதவிக்கு அமிருடின் ஹருண் போட்டியிடுகிறார்.
இன்று நடைபெறவிருக்கும் கட்சியின் தலைமைத்துவ தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் தாம் தோல்வியுற்றால் பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ராபிஸி ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் உதவித்தொடர் பதவிக்கு போட்டியிடும் அமிருடின் இந்த போட்டியில் தோல்வியுற்றால், மந்திரி பெசார் பதவியை ராஜினாமா செய்வதே பொருத்தமாக இருக்கும் என ஜெராம் பாடாங் சட்டமன்ற தொகுதியின் பெரிக்காத்தான் நேஷனல் ஒருங்கிணைப்பாளருமான அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய நிலையில் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்க ஆட்சி அம்னோவின் தயவில் தான் நடந்து வருகிறது.
நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தில் அம்னோவிற்கு 14 இடங்கள் உள்ளது.ஆனால் பிகேஆர் கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமே உள்ளது.
ஆகையால் மந்திரி பெசார் பதவியை பிகேஆர் அம்னோவிற்கு விட்டுக் கொடுப்பதை முறையானது என சஞ்சீவன் கேலியாக கூறினார்.
இன்று நடைபெற இருக்கும் கட்சியின் துணைத் தலைவர் தேர்தலில் ரபிஸி ரம்லி மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வி நூருல் இஸாசா அன்வார் நேரடியாக மோதுகின்றனர்.


