
மலேசிய இந்து சங்கம், ஜொகூர் மாநில பேரவைகளின் ஆண்டுக் கூட்டம் 17-05-2025 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஸ்கூடாய் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கி. ரவின்குமார் மற்றும் தேசிய தலைவர் ஸ்ரீகாசி சங்கபூசன் தங்க கணேசன் ஆகியோர் கலந்து சிறப்புரை ஆற்றினர். மாண்புமிகு ரவின்குமார், இந்து மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டிய கால சூழலில் நாம் பயணிக்கிறோம் என்று அனைவரும் நினைவில் கொள்ள வலியுறுத்தினார். மேலும் சமயத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு ம.இ.கா ஜொகூர் மாநில சமயப் பிரிவுத் தலைவர் தொண்டர்மணி க. சேகரன் அவரிடம் ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஆலயங்களில் வாரம் ஒரு ஆலயத்தில் சொற்பொழிவு நடத்த ஏற்பாடு செய்யுமாறு அவரை நியமித்தார். இவருடன் மலேசிய இந்து சங்கமும் இணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.

தேசிய தலைவர் பேசுகையில் மாநில திருமுறை விழாவிற்கு ரி.ம. 25,000.00 வழங்குவதுடன் ஒவ்வொரு பேரவைக்கும் ரி.ம 5000.00 இந்த வருடம் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.
மேலும் மலேசிய இந்து சங்கம் செய்த பணிகளைப் பட்டியலிட்டார்.
முன்னதாக வரவேற்புரை ஆற்றிய மாநிலச் செயலாளர் தொண்டர்மணி க. விஜயன் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவதாக கூறினார். தொடர்ந்து தலைமையுரை ஆற்றிய மாநிலத் தலைவர் ஸ்ரீ காசி சங்கரத்னா இராம கிருஷ்ணன் மாநிலம் கயிலை துரைசாமி ஐயாயுடன் இணந்து பஞ்சபுராணம் போட்டியை ஒவ்வொரு பேரவையிலும் நடத்தி சமயம் நிறைந்த சமுதாயமாக நமது சமுதாயத்தை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

மாநிலத் தலைவராக ஸ்ரீகாசி சங்கரத்னா இராமகிருஷ்ணன் தொடர, துணைத் தலைவராக தொண்டர்மணி க. விஜயன், செயலாளராக தொண்டர்மணி இரா. இராஜ்குமார், துணைச் செயலராக திருமதி வ. சாந்தி நியமனமாக மற்ற அனைத்து பதவிகளுக்கும் கடந்த வருடம் சேவையாற்றி வந்தவர்களே நியமனம் செய்யப்பட்டனர் என தேசிய துணைத் தலைவர் கணேச பாபு ராவ் தேசிய தலைவர் சங்கபூசன் தங்க கணேசன் ஒப்புதலோடு நியமனக் கடிதம் வழங்கினார்.
இந்த ஆண்டு மாநிலச் செயலாளர் இரா. இராஜ்குமார், சமூகநல தலைவர் பா.சேகர், ஜொகூர்பாரு துணைத் தலைவர் இரவிச்சந்திரன், லார்க்கின் செல்வ விநாயகர் ஆலயத் தலைவர் இரா. சுப்பிரமணியம், குளுவாங் பேரவை பொருளாளர் அ. ஆனந்தன், தீராம் பாரு பேரவை தலைவர் சு. சரோஜா ஆகியோர் தொண்டர்மணி விருதும், இளைஞர் பிரிவு தலைவர் கி. ரூபனுக்கு விவேகரத்னா விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
முன்னதாக மாநில சமயப் பிரிவுத் தலைவர் மற்றும் ஸ்கூடாய் பேரவை தலைவர் கவிஞர் மோகனதாசு முனியாண்டி அவர்களின் எண்ணச் சிறகுகள் என்ற கவிதை நூலை மாநிலத் தலைவர் சங்கரத்னா இராமகிருஷ்ணன் வெளியிட்டு வாழ்த்திப் பேசினார். முதல் நூலை ஸ்கூடாய் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத் தலைவர் டத்தோ பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டு வாழ்த்தினார். மற்ற தேசிய, மாநிலத் தலைவர்களும் நூலைப் பெற்றுக் கொண்டு வாழ்த்தினர். இக் கூட்டத்தில்
200 உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.


