
தமிழ் பள்ளியிலிருந்து இடைநிலைப் பள்ளிக்கு செல்லும் இந்திய மாணவர்கள் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் தங்களின் தேர்வு பாடமாக தொடர வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.
6 ஆண்டு கால கற்றலின் பலனும் மொழியின் வளர்ச்சியும் அதனை சார்ந்துள்ள நிலையில் பல்கலைக்கழகம் வரைக்குமான தொடர்ச்சியும் அது உறுதி செய்யும் என்று அவர்.
நேற்று இங்கு மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்த சிறார்-இளையோர் இலக்கிய படைப்பாளர்கள் பயிலரங்கம் ஒன்றை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
தமிழ் மொழி நமது அடையாளத்தின் நாடி. இந்திய சமூகத்தில் தமிழ் மொழி தொடர்பு ஊடகம் மட்டுமின்றி அது நமது நாகரிகத்தின் பாரம்பரியம் என்றார் அவர்.

இந்த நவீனமய காலத்தில் தாய் மொழி மீது இளைய சந்ததியினர் பற்றை நிலை நிறுத்துவதில் நாம் சவால்களை எதிர் நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மொழி மீது இளைய சந்ததியினர் பற்றுடன் இருக்க இது போன்ற பயிலரங்கம் மிக அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மொழி வலுப்பெற இந்திய சமூகத்திற்கிடையே வாசிக்கும் கலாச்சாரத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு இந்திய சமூகத்தின் அர்ப்பணிப்பு மிக அவசியம் என அவர் குறிப்பிட்டார்.


