
வெள்ள எச்சரிக்கை ஒலிக்கு மத்தியில் நிம்மதி இழந்தோம் தாமான் ஸ்ரீ மூடா மக்கள் வேதனையுடன் கூறினார்.
இன்று அதிகாலை முதல் பெய்த மழையை தொடர்ந்து ஷாஆலம் தாமான் ஸ்ரீ மூடா வெள்ளத்தில் மூழ்கியது.
நான்காவது முறையாக தாமான் ஸ்ரீ மூடா வெள்ளக் காடாகியுள்ளது.
நூற்றுக்கணக்கான மக்கள் தற்போது வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
அதே வேளையில் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் வீட்டு வாசலில் வேதனையுடன் அமர்ந்துள்ளனர்.
குறிப்பாக வெள்ள எச்சரிக்கை ஒலி தொடர்ந்து ஒலிப்பதால் அம்மக்கள் தொடர்ந்து பதற்றமடைந்துள்ளனர்.
சின்ன மழையாக இருந்தாலும் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து விடுகிறது.
இதனால் ஒவ்வொரு முறையும் நாங்கள் பெரிய இழப்புகளை எதிர்நோக்குகிறோம்.
முடிந்த வரை செலவை கூட நாங்கள் சமாளித்து விடுவோம்.
ஆனால் இப்பிரச்சினைக்கு எப்போது தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் எங்களின் கேள்வியாகும்.
ஒவ்வொரு நாளும் வெள்ள எச்சரிக்கை ஒலிக்கு மத்தியில் எங்களால் வாழ முடியாது.
இந்த ஒலியில் இருந்து எங்களுக்கு விடுதலை வேண்டுமென அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.


