
பெட்டாலிங் ஜெயா 10
ரயில் நிலையங்களில் உள்ள முகப்பிடங்களில் டிக்கெட்டுகள் வாங்க வெ 5 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கேடிஎம் நிறுவனத்தின் நிபந்தனையை மலேசிய பயனீட்டாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் (போம்கா) கடுமையாக சாடியது.
ரயில் நிலையங்களில் உள்ள முகப்பிடங்களில் இந்த கூடுதல் கட்டண வசூலிக்கும் நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என போம்கா தலைவர் டத்தோ டாக்டர் என். மாரிமுத்து கூறினார்.
இந்த வெ 5 கூடுதல் கட்டணதை ஊனமுற்ற மலேசியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவது இரக்கமற்ற செயல் என அவர் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு வாரங்களாக இந்த விவகாரக் குறித்து பல புகார்களை தாங்கள் பெற்று வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த கூடுதல் கட்டணத்தை தவிர்க்க வேண்டுமானால் கேடிஎம் செயலியை பதிவிறக்கம் செய்யும்படி பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு தொடக்கம் முதல் ரொக்கமற்ற கட்டண முறையை கேடிஎம் அமலாக்கம் செய்துள்ளது.
மலிவான கட்டணங்களுக்கு ஆன்லைன் அல்லது சுய சேவை முகப்பிடங்களில் பயணிகள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

‘பார்வை குறைந்த ஊனமுற்ற ஒருவர் செயலியை எப்படி பயன்படுத்த முடியும்?கேடிஎம் அதிகாரிகள் நகைச்சுவை செய்கிறார்களா? என அவர் வினவினார்.
இந்த தரப்பைச் சேர்ந்த மலேசியர்களுக்கு என சலுகை வழங்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பினார்.
தனது அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் ஆன்லைன் ஆன்லைன் முறையை அறிமுகம் செய்வதிலும் கேடிஎம் அதிகமான பணத்தை முதலீடு செய்துள்ளதாக தமக்கு தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.
இந்த முதலீட்டு பணத்தை மீண்டும் வசூலிக்கத்தான் அந்த நிறுவனம் இதை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
கேடிஎம் அரசாங்க சார்புடைய நிறுவனம் என்பதால், இந்த கூடுதல் கட்டணம் ஏற்றுக் கொள்ள முடியாது என டத்தோ மாரிமுத்து குறிப்பிட்டார்.
ஊனமுற்ற மலேசியர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கேடிஎம் சிறப்பு பரிசீலனை வழங்குவது கேடிஎம் நிறுவனத்தின் தார்மீக பொறுப்பு என்றார் அவர்.
ஒரு ரயில் நிலைய முகப்பிடத்தில் டிக்கெட்டுகளை வாங்க சென்ற பார்வை குறைந்த கே.டினேஷ் மேனன் என்பவரிடம் எந்த ஆலோசனையும் கூறப்படவில்லை, தாம் வாங்கவிருந்த டிக்கெட்டுகளுக்கு கூடுதல் வெ 15 செலுத்தும் படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அப்படி இந்த கூடுதல் கட்டணத்தை செலுத்த விரும்பாவிட்டால் கேடிஎம் செயலியை பயன்படுத்தும்படி டினேஷ் மேனன் கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.


