
கோலாலம்பூர் ஏப் 4
அண்மையில் சர்ச்சையாக இருந்து வந்த மாஸ்ஜிட் இந்தியா ஸ்ரீ காளியம்மன் ஆலய விவகாரம் குறித்து மலேசிய இந்து சங்க நிர்வாக குழு உறுப்பினர்களுடன் தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த விவகாரத்தில் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வின் அவசியம் குறித்து இந்த சந்திப்பில் தாம் வலியுறுத்தியதாக துணையமைச்சர் சரஸ்வதி கூறினார்.
நமது கலாச்சார பாரம்பரியங்கள் காக்கப்பட வேண்டும் என்ற அவசியம் குறித்து நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் வலியுறுத்தியதாக அவர் சொன்னார்.
பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தின் அவசியம் குறித்தும் தாம் விளக்கம் தந்ததாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற இந்து ஆலயங்கள் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட முடிவுகள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக அவர் சொன்னார்.
ஆலயங்கள் மாநாட்டில் இந்நாட்டில் இந்து ஆலயங்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சு மற்றும் மலேசிய இந்து சங்கம் ஒன்றிணைந்து நடத்திய அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அறிக்கை அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


