
ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய நிர்வாகம் 2 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டைப் பெறவில்லை என்று பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலேஹா முஸ்தபா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட ஆலயத்திற்கு அரசாங்கம் 2 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கியதாக சமய போதகர் ஃபிர்டாவ்ஸ் வோங் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார். ஃபிர்டாவ்ஸ் வோங்கின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் ஆதாரமற்றவை என்று அவர் சாடியுள்ளார்.
அரசாங்கம் விவரிக்கப்பட்டுள்ளபடி ஆலயத்திற்கு எந்த வகையான இழப்பீடும் வழங்குவதாக ஒருபோதும் உறுதியளிக்கவில்லை என்று அமைச்சர் ஜலேஹா முஸ்தபா திட்டவட்டமாக கூறியுள்ளார். உண்மையில், நேற்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்த தீர்வைத் தவிர வேறு எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்று இன்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பல நாட்கள் சர்ச்சைக்குரிய விவாதங்களுக்குப் பிறகு, 130 ஆண்டுகள் பழமையான ஆலய நிர்வாகம், ஜேக்கல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கு வழிவகுக்க ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இழப்பீடு குறித்த ஃபிர்டாவ்ஸ் வோங்கின் கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.


