
உணவகங்களில் பொறுப்பற்ற வாடிக்கையாளர்களின் செயல்கள் குறித்து புகார் செய்தால் போலிசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி இதனை கூறினார்.
கோலாலம்பூர் போலிஸ்படைத் தலைவர் டத்தோ ருஸ்டி பின் முஹம்மத் இசாவை மரியாதை நிமிர்த்தமாக பிரெஸ்மா செயற்குழுவினர் இன்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பு கோலாலம்பூர் போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.
கோலாலம்பூர் போலிஸ்படைக்கும் முஸ்லிம் உணவக நடத்துநர்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதையும் மூலோபாய ஒத்துழைப்பைப் பற்றி விவாதிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த சந்திப்பு நடைபெற்றது.
மேலும் ஒரு சில பொறுப்பற்ற வாடிக்கையாளர்கள் உணவகங்களுக்கு எதிராக அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றனர். குறிப்பாக உணவில் கரப்பான் பூச்சி இருக்கிறது. இந்த உணவை சாப்பிட்டதால்தான் எனக்கு இப்படி ஆகி விட்டது என உணவகங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர்.
இதுபோன்ற விவகாரங்களில் போலிசாரின் நடவடிக்கை என்னவென்று கேள்வி எழுப்பபட்டது.
இதற்கு பதிலளித்த டத்தோ ருஸ்டி, போலிஸ் புகார் இருந்தால் மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். ஆகவே உணவக உரிமையாளர்கள் இது சம்பந்தமாக போலிஸ் புகார் செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினார் என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.
பிரெஸ்மாவின் உதவித் தலைவர்களான அப்துல் முக்தாஹிர் பின் எம். இப்ராஹிம், முஹிபுல்லா கான், உச்சமன்ற உறுப்பினர் முஹம்மத் அஸ்ரின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


