
கோலாலம்பூர் பிப் 4
தைப்பூசத் திருநாளில் பக்தர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையிலான காவடிகளை அதன் மாண்பையும் புனிதத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.
காவடி சுமப்பதிலும் பக்தர்களின் நேர்த்திக் கடனை செலுத்துவதற்குமான மாண்பை அறிந்து நாம் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.
காவடிகள் சுமத்தும் நேரத்தில் கேலி கிண்டல்களுக்கு நாம் வாய்ப்பளிக்கும் வகையில் நடந்து கொள்வதை நாம் தவிர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
காவடி எடுப்பது என்பது ஒரு பொழுதுபோக்கு செயல் அல்ல என்பதை நம் சமூகம் உணர வேண்டும் என்பதற்காக தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் கீழ் காவடியாட்டம் குறித்தான பட்டறை நடத்தப்பட இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
காவடி எடுப்பதன் புனிதத்துவம், அதன் முக்கியத்துவம், காவடி எடுப்பதற்கான சரியான முறைமைகள், நடன நுட்பங்கள், பாதுகாப்பு அம்சங்கள் என பல்வேறு கூறுகளை உள்ளடக்க ஒரு பயிலரங்கை ஒற்றுமை துறை அமைச்சர் நடத்த விருப்பதாக அவர் தெரிவித்தார்.


