
சுபாங் ஜன 16
நாட்டின் தேசியவாதி துன் சம்பந்தனின் அளப்பரிய சேவைகளை நினைவு கூறும் வகையில் பெருவிழா நடத்தப்படும் என தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அறிவித்தார்.
ஒற்றுமைத்துறை அமைச்சின் ஏற்பாட்டிலான இந்த முயற்சிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு துன் சம்பந்தன் தமிழ் பள்ளியில் ஒற்றுமை பொங்கல் கொண்டாட்டத்தை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
துன் சம்பந்தனின் அளப்பரிய சேவைகளை நினைவு கூறும் வண்ணம் இந்த கொண்டாட்டம் அமைந்திருக்கும் என அவர் சுட்டிக் காட்டினார்.

இவ்வாண்டு மத்தியில் இரண்டு நாட்களுக்கு கொண்டாடப்படவிருக்கும் இந்த நிகழ்வை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றார் அவர்.
மலேசிய மண்ணின் திருமகனை நினைவு கூறும் இந்த நிகழ்வு இந்திய சமூகத்திற்கு ஒரு வரலாற்றுப் பூர்வ நிகழ்வாக இருக்கும் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
நமது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் முக்கிய பணிகளில் ஒன்று மக்களிடையே ஒற்றுமை உணர்வை உய்வித்தலாகும்.
அதனை மெய்ப்பிக்கும் வகையில் இந்த வாவாசான் பள்ளி வளாகத்தில் துன் சம்மந்தன் பள்ளி ஏற்பாடு செய்திருக்கும் இந்த ஒற்றுமை பொங்கல் சிறந்த சான்றாகவும் சிறந்த பணியாகும் சிறந்த எடுத்துக்காட்டவும் விளங்குகிறது என அவர் சொன்னார்.
இன்றைய மாணவர்கள் நாளைய உலகின் தலைசிறந்த தலைவர்களாக வேண்டும். அதற்கு இன்றே அவர்களின் நெஞ்சினில் ஒற்றுமை உணர்வு விதைக்கப்பட வேண்டும். அந்த விளைச்சலுக்கு இதுபோன்ற நிகழ்வுகளில் சான்று. ஒற்றுமை மட்டுமே நமது நாட்டை மேம்படுத்தும்.
ஒற்றுமை உணர்வு மேலோங்கினால் விட்டுக் கொடுக்கும் பண்பும் புரிந்துணர்வும் உதயமாகும். அன்பு விளையும் அன்பின் விளைச்சலாக ஒற்றுமை கனி அறுவடையாகும்.

இன்றைய பொங்கல் அதைத்தான் குறிக்கின்றது. அறுவடை என்பது விவசாயத்தில் மட்டுமல்ல. நம் இதயத்திலும் தான். நமது பண்பாட்டில், நமது பாரம்பரியத்தில், நமது கலாச்சாரத்திலும் பொங்கல் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த கொண்டாட்டத்தில் துன் சம்பந்தன் தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியர் ம. ஜோன்சன், டத்தோ ஓன் ஜாபார் தேசியப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீமதி நிக்,துன் டான் செங் லோக் சீனப் பள்ளியின் தலைமை ஆசிரியர் யோங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


