
ஜாக்கார்த்தா ஜன 10
இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத்தலமான பாலி மற்றும் ஆஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தின் தலைநகரான டார்வின் ஆகிய நகரங்களுக்கிடையே ஏர் ஆசியா இந்தோனேசியா மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்குகிறது.
இவ்விரு நகர்களுக்கிடையிலான நேரடி விமான சேவை எதிர்வரும் 22 மார்ச் 2025 முதல் தொடங்கவிருப்பதாக ஏர் ஆசியா இந்தோனேஷியா அறிவித்தது.
செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு இந்த நேரடி விமான சேவையை ஏர் ஆசியா இந்தோனேசியா மேற்கொள்ளவிருக்கிறது.
இந்த நேரடி விமான சேவைக்கு வாரத்திற்கு ஆயிரத்துக்கு கூடுதலான இருக்கைகள் வழங்கப்படும். இந்த சேவை இவ்விரு நகரங்களுக்கு இடையே சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதாரம் மறுபடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலி-டார்வின் நகர்களுக்கு இடையிலான விமான சேவைக்கு ஏர் பாஸ் A 320-200 ரக விமானத்தை ஏர் ஆசியா பயன்படுத்தவிருக்கிறது.
இந்த விமான சேவையின் மூலம் ஆசிய நகர்களுக்கு சுற்று பயணிகள் எளிதில் செல்ல முடியும்.
இந்த விமான சேவை கோலாலம்பூர், ஜாக்கர்த்தா, ஹாங்காங் மற்றும் கோமொடோ தீவு ஆகிய நகரங்களை எளிதாக இணைக்கும் என ஏர் ஆசியா இந்தோனேசியா தலைமை செயல்முறை அதிகாரி வெரானித்தா யோசெபின் கூறினார்.
டார்வின் ஆசியாவிற்கு அருகாமையில் உள்ள ஆஸ்திரேலியா நகரமென அவர் சுட்டிக் காட்டினார்.
பாலி-டார்வின் விமான சேவையின் மூலம் மலிவான கட்டணத்தில் சுற்றுப்பயணிகள் ஆசிய நகர்களுக்கு சிறகடிக்க முடியும் என்றார் அவர்.
பாலி ஏர் ஆசியா இந்தோனேசியாவிற்கு மிகப்பெரிய தளமாக விளங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
டார்வின் வாழ் மக்களுக்கு பாலி முதல்நிலை சுற்றுலா தளம் என அவர் குறிப்பிட்டார்.


