Sunday, September 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அன்வார் கேரளாவுக்கு விஜயம்: புதிய ஒத்துழைப்புத் துறைகளை ஆராய வாய்ப்பு

கேரளம், செப் 14

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கேரள விஜயம், மலேசியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையே ஆரோக்கியச் சுற்றுலா, கல்வி, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்தியாவுக்கான மலேசிய துணைத் தூதரகத் தலைவர் கே. சரவண குமார் கூறுகையில், கேரளத்திற்கு ஆயுர்வேதத்தில் விரிவான நிபுணத்துவம் இருப்பதுடன், பாரம்பரிய மருத்துவ முறைகளை நவீன மருத்துவத்துடன் (அலோபதி) ஒருங்கிணைக்கும் அணுகுமுறையிலும் சிறப்பான அனுபவம் உள்ளது. மலேசியா தனது ஆரோக்கியச் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இதிலிருந்து பயனடைய முடியும் என்றார்.

“மேலும், மலேசியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையே, குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் சுற்றுலாப் போக்குவரத்து கணிசமாக இருப்பதால், சுற்றுலாவும் மேலும் வலுப்படுத்தக்கூடிய முக்கியத் துறையாக உள்ளது.

“சுற்றுலா உறவுகள் இரு நாடுகளுக்கும் பயனளிக்கின்றன. இருப்பினும், தென்னிந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்,”

என்று பிரதமரின் விஜயத்திற்கு முன்னதாக மலேசிய ஊடகங்களிடம் அவர் தெரிவித்தார்.

புதுடெல்லியில் நடைபெற்ற 18ஆவது பிரிக்ஸ் (BRICS) தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், அன்வார் கேரளாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் இந்தியாவின் கிராண்ட் முஃப்தி ஷேக் அபூபக்கர் அஹ்மத் அவர்களை ஜாமியா மர்கஸில் சந்தித்து, சமூக மேம்பாடு, கல்வி முன்னேற்றம் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உள்ளார்.

கேரளாவுக்கு பிரதமராக அன்வார் மேற்கொள்ளும் முதல் விஜயம் என்பதால், இது மலேசியா–இந்தியா இருதரப்பு உறவுகளை, குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று சரவண குமார் தெரிவித்தார்.

இந்த விஜயம் தென்னிந்தியாவுடனான மலேசியாவின் உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதுடன், இருதரப்புக்கும் பொதுவான நலன் கொண்ட புதிய ஒத்துழைப்புத் துறைகளை ஆராயும் வாய்ப்புகளையும் உருவாக்கும் என அவர் கூறினார்.

மலேசியா இந்தியாவின் முக்கியமான இருதரப்பு கூட்டாளி என்பதால், கேரள மாநில அரசும் பிரதமரின் வருகையை முக்கியமான முன்னேற்றமாகக் கருதுகிறது. மாநில விருந்தினராக அன்வாருக்கு சிறப்பான வரவேற்பும் விருந்தோம்பலும் வழங்குவதற்கான விரிவான ஏற்பாடுகளையும் கேரள அரசு மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இயற்கை அழகு மற்றும் கலாசாரப் பாரம்பரியத்திற்குப் புகழ்பெற்ற கேரளா, நிலையான வளர்ச்சி, தூய்மையான எரிசக்தி மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் சிறப்பான பெயரைப் பெற்றுள்ளது. இத்துறைகளிலும் இருதரப்பும் தங்களது நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்றார்.

கோழிக்கோடு (Calicut/Kozhikode) நகருக்கு பிரதமர் மேற்கொள்ளும் விஜயத்தின் போது, வர்த்தகத் தொடர்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். முன்னணி இந்திய தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் முக்கியப் பிரதிநிதிகளுடன் நடைபெறும் சந்திப்புகள், புதிய ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அன்வார் நாளை கேரள முதலமைச்சர் வி. டி. சதீசன் மற்றும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோரைச் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்புகளில் வர்த்தகம் மற்றும் முதலீடு, சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கியத் துறைகளில் மலேசியா–கேரளா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மலேசிய பிரதமர் அன்வார், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற 18ஆவது பிரிக்ஸ் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை புதுடெல்லி சென்றடைந்தார்.

மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நவீன இராஜதந்திர உறவுகள் 1957ஆம் ஆண்டு , மலேசியா சுதந்திரம் பெற்ற சிறிது காலத்திலேயே நிறுவப்பட்டன. தெற்காசியாவில் மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா தொடர்ந்து விளங்கி வருகிறது. 2025ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 18.55 பில்லியன் அமெரிக்க டாலர் (RM79.33 பில்லியன்) என்ற அளவை எட்டியது.

இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான மூலோபாய கூட்டாண்மையை (Comprehensive Strategic Partnership) மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் கல்வி உள்ளிட்ட அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளையும் இது உருவாக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular