
மஇகா தேசிய மட்டத்திலும் தமிழ் ஊடக வட்டத்திலும் நன்கு அறிமுகமான எல். சிவசுப்பிரமணியம் இன்று டத்தோ பட்டம் பெற்றுள்ளார்.
அரசியலில் நீண்ட காலம் பயணித்துவரும் டத்தோ சிவ சுப்பிரமணியத்திற்கு மலாக்கா மாநில ஆளுநர் டத்தோ பட்டம் வழங்கி சிறப்பு செய்துள்ளார்.
மஇகா தலைமைக்கு தளராத விசுவாசியாக விளங்கி வரும் டத்தோ சிவசுப்பிரமணியத்தின் பொது வாழ்க்கைப் பயணம் நெடியது.
அவரின் தளராத உழைப்பிற்கும் அரசியல் எல்லையில் அவர் உண்மையாக ஆற்றிரும் கடமைக்கும் இந்த உயர்வு கிட்டி இருப்பதாகக் கருதலாம்.
மஇகா தேசிய ஊடகப் பிரிவு செயலாளராக கடமை ஆற்றி வரும் டத்தோ சிவசுப்பிரமணியம், மஇகா மத்திய செயலவை உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
மேலோர் அவை என்று சொல்லக்கூடிய நாடாளுமன்ற மேலவையின் தலைவராக தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் இருந்தபொழுது அவருக்கு தனிச் செயலாளராக இவர் கடமையாற்றி இருக்கிறார்; அதைப்போல தெற்காசிய கட்டுமானத் தூதராக இருந்த பொழுதும் விக்னேஸ்வரனிடம் சிறப்பு செயலாளராக பணிபுரிந்தவர் டத்தோ சிவ சுப்ரமணியம்.
1983-இல் எஸ் பி எம் தேர்வெழுதி பள்ளி கல்வியை நிறைவுசெய்த இவர், 1986 இல் பல்கலைக்கழக நுழைவுக்கான புகுமுக கல்வி எஸ்டிபிஎம்-ஐ நிறைவு செய்து வர்த்தக நிர்வாகத் துறையில் இளங்கலை பட்டத்தை முடித்திருக்கிறார்.
கோல சிலாங்கூர் மாவட்ட மன்றத்தில் கவுன்சிலராக விளங்கிய டத்தோ சிவசுப்பிரமணியம், மலேசிய இந்திய உலோக மறுசுழற்சி தொழிற்சங்கத்தின் நிருவாக செயலாளராகவும் 2000-த்தாம் ஆண்டிலிருந்து 8 ஆண்டுகள் செயல்பட்டு இருக்கிறார்.

முந்தைய தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் பிரதமர் துறை அலுவலகத்தின் கீழ் செயல்பட்ட ‘மைடஃப்தார்’, ‘பெமாண்டு’, (MYDAFTAR & PEMANDU) ஆகிய அமைப்புகளில் குழு உறுப்பினராகவும் டத்தோ சிவசுப்பிரமணியன் பங்காற்றி இருக்கிறார்.
சொத்து பரிவர்த்தனை நிறுவனத்தில் மேலாளராகவும் ‘KOPDIDIK’ என்னும் கூட்டுறவு அமைப்பில் இயக்குனராகவும் டத்தோ எல் சிவ சுப்ரமணியம் செயல்பட்டு இருக்கிறார்.
வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசுசார் அமைப்புக்கள், அரசியல் இயக்கம் என்று தொடர்ந்து பொதுவாழ்வுப் பயணத்தை மேற்கொண்டு வரும் டத்தோ எல் சிவசுப்பிரமணியம் தனக்கு டத்தோ பட்டம் கிடைப்பதை ஓர் அரசியல் அங்கீகாரமாக ஏற்றுக் கொள்ளும் அதேவேளை இது தன்னுடைய அரசியல் பயணத்தை மேலும் ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார்
இத்தகைய சிறப்பை எட்டுவதற்கு துணை நின்ற
மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் உள்ளிட்ட தேசிய தலைமைக்கும் இந்தவேளையில் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இன்று மலாக்கா ஆளுநர் மாளிகையில் டத்தோ பட்டத்தைப் பெற்ற பின் சிவசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


