
எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் கட்சி போட்டியிடும் ஸ்ரீ தஞ்சோங் மற்றும் சிரம்பான் ஜெயா தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் கூறினார்.
அனைத்து சமூகங்களிடமிருந்து மஇகா வேட்பாளர்களுக்கான ஆதரவு அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நேற்று இங்கு நடைபெற்ற கட்சியின் மத்திய செயலவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
இந்த இரண்டு தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட பிரச்சார வியூகம் குறித்து மத்திய செயலவை கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தேசிய முன்னணியை பிரதிநிதித்து ஸ்ரீ தஞ்சோங்கில் போட்டியிடும் ஒரு வழக்கறிஞரான தினாளன் ஒரு திறமையான வேட்பாளர் என்றார் அவர்.
அதே போல் சிரம்பான் ஜெயாவில் போட்டியிடும் அச்சுதன் ஒரு பொருத்தமான வேட்பாளர் என அவர் குறிப்பிட்டார்.
தேசிய முன்னணி மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய கூட்டணிகளின் ஆதரவு நமக்கு இருப்பதால், இவ்விரு தொகுதிகளையும் நிச்சயம் கைப்பற்றுவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளையும் மஇகா கைப்பற்றி சாதனை படைத்தது என அவர் பெருமிதம் கொண்டார்.
இந்த 100 விழுக்காடு சாதனையை நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் கட்சி அடையும் என அவர் தெரிவித்தார்.
கடந்த 15 ஆவது மாநில சட்டமன்ற தேர்தலில் அம்னோ 14 தொகுதிகளை கைப்பற்றியது.
ஆனால் இந்த தேர்தலில் அதிக பெரும்பான்மை தொகுதிகளை பெற்று தேசிய முன்னணி நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹிட் அமிடி நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே நாட்டின் 16 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு தான் கட்சித் தேர்தல் நடைபெறும் என நேற்றைய மஇகா மத்திய செயலவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.


