
கோலாலம்பூர், ஜூலை 9 — நாட்டில் உள்ள தேசிய தமிழ்ப் பள்ளிகளை மூடும் இலக்கை பாஸ் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கொண்டிருப்பதாகச் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு வெளியிட்ட அறிக்கை அபத்தமானது என பாஸ் ஆதரவாளர் பேரவையின் (DHPP) தலைவர் குமரேசன் கூறினார்.பாப்பாராய்டுவின் இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்றது. வாக்காளர்களைக் குழப்பும் நோக்கில் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் சுமத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.”நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளிகளை மூடுவோம் என நாங்கள் கூறியதாகச் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு உரிய ஆதாரங்கள் நிரூபிக்கப்பட வேண்டும்,” என்றார் அவர்.இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பாப்பாராய்டு உடனடியாக மீட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், மலேசிய மக்களிடம் இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


