
இன்று ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் 26 ஏப்ரல் வரை நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான வட மண்டல ஒருமைப்பாட்டு வார நிகழ்ச்சியைத் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இதன் தொடக்க விழா பேராக், ஈப்போவில் அமைந்துள்ள இந்திரா மூலியா அரங்கில் நடைபெற்றது.
மக்களிடையே ஒருமைப்பாட்டு உணர்வையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் முக்கிய தளமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளதாகத் துணையமைச்சர் குறிப்பிட்டார்.
“ஒன்றிணைந்து ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவோம்” என்ற கருப்பொருளுடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சி மலேசியாவின் பல இன, மத மற்றும் பண்பாட்டு பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் கலாசாரம், கலை, பாரம்பரியம், உணவு மற்றும் விளையாட்டு போன்ற அம்சங்களை மையமாகக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில், மலேசிய தேசிய நூலகத்தின் (PNM) புத்தக விருதுகள் வழங்கும் விழாவுடன், உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாளை முன்னிட்டு ’10 நிமிட ஒன்றாக வாசிப்போம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த இரண்டு முயற்சிகளும் மலேசியர்களிடையே அறிவு மற்றும் வாசிப்புப் பழக்கத்தை வலுப்படுத்துவதற்கான முக்கிய அம்சங்களாகும்.
தற்போது 12 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ‘ஒன்றாக வாசிப்போம் 10 நிமிடங்கள்’ நிகழ்ச்சி, 2015-ஆம் ஆண்டில் ஆண்டுக்குச் சராசரியாக 15 புத்தகங்கள் என்ற அளவில் இருந்த வாசிப்புப் பழக்கம், 2023-ஆம் ஆண்டில் ஆண்டுக்குச் சராசரியாக 24 புத்தகங்களாக அதிகரித்ததன் மூலம் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் துணையமைச்சர் சுட்டிக் காட்டினார்.
2030-க்குள் மலேசியாவை ஒரு வாசிப்பு நாடாக மாற்றும் இலக்கிற்கு இணங்க, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகம் மலேசிய தேசிய நூலகத்துடன் (PNM) இணைந்து நாடு தழுவிய வாசிப்பு ஊக்குவிப்புத் திட்டங்களைத் தொடர்ந்து தீவிரப்படுத்தும் என்றார் துணையமைச்சர்.
மேலும், மலேசிய தேசிய நூலகம் (PNM) 2025/2026 புத்தக விருதுகள் உள்ளூர் எழுத்தாளர்களின் தரமான படைப்புகளை அங்கீகரிக்கிறது. இந்த விருதுகள் அறிவு, சிந்தனை மற்றும் சமூக நாகரிக வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு அளிக்கும் படைப்புகளை ஊக்குவிக்கின்றன.
மொத்தம் 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் இலக்கவியல் புத்தகங்கள் மற்றும் மின்னியல் புத்தகங்களின் பயன்பாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு “இலக்கவியல் புத்தக வாசகர் தேர்வு விருது” என்ற புதிய பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.


