
கோலாலம்பூர் செப் 2
இன்றைய சீன மற்றும் இந்திய சமூகத்தினர் மிக முதிர்ச்சி அடைந்துள்ளதோடு பாஸ் கட்சியைப் பற்றி தெளிவாக தெரிந்து வைத்துள்ளனர் என பாஸ் ஆதரவு பேரவையின் தேசிய தலைவர் நா. பாலசுப்பிரமணியம் கூறினார்.
உண்மையற்ற தோற்றத்தை ஏற்படுத்தி பயத்தை ஏற்படுத்தும் சில தரப்பினரின் அறிக்கைகளை இவ்விரு சமூகத்தினர் இனியும் நம்ப தயாராக இல்லை என அவர் சொன்னார்.
நாடு தழுவிய நிலையில் இவ்விரு சமூகங்களிடமிருந்து பாஸ் கட்சிக்கு கிடைக்கப் பெற்று வரும் ஆதரவு அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பாஸ் கட்சியின் சுத்தமான தலைமைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்விரு சமூகங்களின் ஆதரவு அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்நாள் வரை பாஸ் கட்சியில் எந்த ஒரு முக்கிய தலைவரும் ஊழலுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
அதேவேளையில் பதவிக்காகவோ அல்லது சுயநலத்திற்காகவோ எந்தவொரு பாஸ் எம்பியும் கட்சித்தாவியது கிடையாது என்றார் அவர்.
இந்த முக்கிய காரணங்களை கருத்தில் கொண்டு தான் சீன மற்ற இந்திய சமூகத்தினர் பாஸ் கட்சியை ஆதரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இன மற்றும் மத பாகுபாடு இன்றி பாஸ் கட்சி மக்களுக்கு சேவைகளை செய்து வருவதை இவர்கள் அறிந்துள்ளனர் என அவர் சொன்னார்.
பாஸ் கட்சியின் நேர்மை மற்றும் நிலையான கொள்கை மீது இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் வழி பாஸ் கட்சி மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்ற முடியும் என்பதை இவ்விரு சமூகத்தினர் உணர்ந்துள்ளதாக அவர் கூறினார்.


